நம்மகிட்டவே மோதினாரே.. கனடாவில் கவிழும் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி? ஆப்படித்த இந்திய வம்சாவளி.. ட்விஸ்ட்
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நம் நாட்டில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது கனடாவில் அவரது ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு இந்திய வம்சாவளி தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது உண்மை தான். அங்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
கனடாவில் லிபரல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் தலைவரான ஜஸ்ட்டின் ட்ரூடோ பிரதமராக செயல்பட்டு வருகிறார். இங்கு பிரதமரின் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். கடந்த 2015, 2019 ஆண்டுகளை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஜஸ்ட்டின் ட்ரூடோ பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 338 தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
தற்போது ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. இந்த கட்சி மொத்தம் 154 இடங்களில் வென்றது. கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சிக்கு ஆட்சியை பிடிக்க 16 எம்பிக்களின் ஆதரவு என்பது தேவைப்பட்டது.
இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு இந்திய வம்சவாளியின் ஜம்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சி ஆதரவு வழங்கியது. இந்த கட்சியின் 24 எம்பிக்களின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். கன்சர்வேட்டிவ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது ஜஸ்டின் ட்ரூடோவின் பிரதமர் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டுகள் உள்ளன. இத்தகைய சூழலில் தான் அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கிய வந்த இந்திய வம்சவாளவியின் ஜம்மீத் சிங்கின புதிய ஜனநாயக கட்சி அதனை வாபஸ் வாங்கி உள்ளது. லிபரல் கட்சி மீது புதிய ஜனநாயக கட்சி சமீபகாலமாக அதிருப்தியில் இருந்து வந்தது.
அதேபோல் அந்த கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கும், ஜஸ்ட்டின் ட்ரூடோ மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் கட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை திடீரென்று ஜம்மீத் சிங் வாபஸ் வாங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛பெருநிறுவனங்களின் பேராசைக்கு ஜஸ்ட்டின் ட்ரூடோ அடிபணிந்து வருகிறார். மீண்டும் மீண்டும் அதனை நிரூபித்து வருகிறார். கனடா மக்களை தாராளவாதிகள் வீழ்த்தி விட்டனர். கனடாவை ஆட்சி செய்ய தாராளவாதிகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஜஸ்டின் ட்ரூடோவால் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படியே சென்றால் கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்கும். தற்போது லிபரல் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. அதில் உள்ள தலைவர்கள் சுயநலமாக உள்ளனர். அதேபோல் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அதன் செயல் அதிகாரிகளுக்கான அரசாங்கமாக இது செயல்பட்டு வருகிறது. இனி மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்தலுக்கு புதிய ஜனநாயக கட்சி தயாராக உள்ளது’’ என்றார்.
இதற்கிடையே தனது தலைமையிலான லிபரல் கட்சியின் ஆட்சி கவிழும் என்பதை ஜஸ்டின் ட்ரூடோ முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதுது. இதனை சமாளிப்பதில் அரசு கவனம் செலுத்தும். அதேபோல் மருத்துவம், பள்ளி உணவு திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போதைக்கு அரசியலில் கவனம் செலுத்தப்போவது இல்லை. ஏனென்றால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேர்தல் என்பது வராது. எனது அரசு நீடிக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே தான் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி கவிழுமா? நீடிக்குமா? என்பதற்கான விடை அடுத்தமாதம் தெரிந்துவிடும். ஏனென்றால் செப்டம்பர் மாதம் 16ம் தேதி அங்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. தற்போது ஜம்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கி உள்ளதால் நாடாளுமன்றத்தில் ஆளும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை 156 என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால் பெரும்பான்மைக்கு 170 எம்பிக்கள் வேண்டும். இதனால் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது ஜம்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் சபையை புறக்கணித்தால் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி தப்பித்து விடும். மாறாக அவரது புதிய ஜனநாயக கட்சியின் 24 எம்பிக்களும் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவரது கட்சி பிற எம்பிக்களின் ஆதரவை பெற வேண்டி இருக்கும். ஒருவேளை ஆதரவு கிடைக்காவிட்டால் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி என்பது கவிழ்ந்து விடும்.
தற்போது கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே சமீபகாலமாக பிரச்சனை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தான். சீக்கியரான இவர் கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்தபடி இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை திட்டி வந்தார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் தேடப்படும் தீவிரவாதியாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா தான் கொன்றது. ஏஜென்சி மூலம் அவரை இந்தியா தீர்த்து கட்டி இருக்கலாம். இது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தது. இதனை இந்தியா கடுமையாக கண்டித்தது. உண்மைக்கு புறம்பான தகவல்களை கூற வேண்டாம் என இந்தியா எச்சரித்தது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி கவிழும் நிலைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications