ஆஸ்திரேலியர்கள், மேற்கத்திய நாட்டவரை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தலைமை உத்தரவு
பாக்தாத்: ஆஸ்திரேலியர்கள் உள்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை தாக்குமாறு ஐஎஸ் அமைப்பின் சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அத்னானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈராக்கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிடும் நாடுகளைச் சேர்ந்தவர்களை தாக்கவும். நீங்கள் நம் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் அதிலும் குறிப்பாக அழுக்குப்பிடித்த பிரான்ஸ் நாட்டவர், ஆஸ்திரேலியர் அல்லது கனடாவைச் சேர்ந்தவர், ஐஎஸ் அமைப்புக்கு எதிராக கூட்டணி வைத்து போர் தொடுக்கும் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். இதில் யாருடைய அறிவுரையையோ, தீர்ப்பையோ எதிர்பார்க்கக் கூடாது.
நம்பிக்கை இல்லாதவர் சாதாரண ஆளாக இருந்தாலும் சரி ராணுவத்தினராக இருந்தாலும் சரி அவர்களை கொலை செய்யுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் கடந்த வாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதையடுத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் உண்மையானது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்பு ஐஎஸ்ஐஎஸ் என்று அழைக்கப்பட்ட ஐஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அத்னானி என்பது குறிப்பிடத்தக்கது.