ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்படுகிறாரா? இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்! பரபர தகவல்
டாக்கா: வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இண்டர்போலுக்கு வங்கதேச போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கைக்கு இந்தியா செவி சாய்க்காமல் உள்ள நிலையில், வங்கதேச அரசு இண்டர்போலை நாட திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் புரட்சியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். மேலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும், இந்தியா இந்த விவகாரத்தில் வங்கதேசத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இண்டர்போலுக்கு கோரிக்கை
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக இருந்து வருகிறார். ஷேக் ஹசீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகம்மது யூனுஸ், எப்படியாவது அவரை நாடு கடத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில்தான், வங்கதேசத்தின் விசாரணை முகமையான என்சிபி, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஷேக் ஹசீனா மட்டும் இன்றி மேலும் 12 பேருக்கு எதிராக பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள், அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை அல்லது விசாரணை அமைப்புகள் கோரிக்கையை ஏற்றே இதுபோன்ற கோரிக்கையை என்சிபி முன்வைக்கும் என்று வங்கதேச உயர் போலீஸ் அதிகாரி கூறினார். இது தொடர்பாக உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (மீடியா) எனாமல் ஹாக் சாகோர் கூறியதாவது:-
ரெட் கார்னர் நோட்டீஸ்
ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இத்தகைய கோரிக்கைகளை வைக்கப்படும். நாடு கடத்துதல் மற்றும் அத்தகைய சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியிருக்கும் நபர்களை கண்டறியவும் அப்போதைக்கு கைது செய்யவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். நாட்டை விட்டு தப்பி ஓடியவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை கண்டறியும், இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னார் விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பகிரப்படும். இதுபோன்ற பணிகளுக்கு இண்டர்போல் உதவும்" என்றார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். உடனடியாக ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வங்கதேசத்தின் குற்ற தீர்ப்பாயம் வாரண்ட் பிறப்பித்தது. அதேபோல, அவரது அமைச்சரவையில் இருந்த பல்வேறு அமைச்சர்களுக்கு எதிராகவும் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
அதுமட்டும் இன்றி அரசின் முன்னாள் ஆலோசகர்கள், ராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்தின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் முறைப்படி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்து இண்டர்போல் உதவியை நாடுமாறு கோரியது.












Click it and Unblock the Notifications