மீண்டும் சிக்கிய "பக்"... மலேசிய விமானத்தை தாக்கிய பின் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டதா?
டோரெஸ்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தாக்கி அழித்ததாக சந்தேகிக்கப்படும் ரஷ்யாவின் பக் ஏவுகணை மற்றும் அதன் லாஞ்சர் டேங்க், ஒரு பிரமாண்ட லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டபோது சாலையில் சென்ற வாகனதாரியால் புகைப்படம் மற்றும் வீடியோவில் சிக்கி வெளியாகியுள்ளது.
கிழக்கு உக்ரைன் வான் பகுதியில் பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தாக்கப் பயன்படுத்தப்பட்ட பக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட லாஞ்சர் இதுதான் என்று கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர் இந்த லாஞ்சரும், ஏவுகணைகளும் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளன.
இந்த நிலையில் ரஷ்யாவை நோக்கிச் சென்ற பக் ஏவுகணை லாஞ்சரை சிலர் படம் பிடித்து வெளியிட்டிருப்பதால் தாக்குதல் நடத்தியது இதுதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராணுவ வாகனத்தில்
ராணுவத்திற்குச் சொந்தமான லாரி ஒன்றில் இந்த ஏவுகணை லாஞ்சர் நிறுத்தப்பட்டிருந்தது. பெரிய துணியால் அதை மூடியிருந்தனர்.
ரஷ்யாவை நோக்கி
ரஷ்யாவை நோக்கி இது சென்றுள்ளது. ரஷ்ய எல்லைப் பகுதியையொட்டி இதை சாலையில் சென்ற சிலர் வீடியோவில் படம் பிடித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு எட்டே முக்கால் மணிக்கு இது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
டோரெஸில் சிக்கியதா
ஏற்கனவே புரட்சிப் படையினர் வசம் உள்ள டோரெஸ் நகரில் ஒரு இடத்தில் பக் ஏவுகணை பொருத்தப்பட்ட லாஞ்சர் நிறுத்தப்பட்டிருந்தது புகைப்படமாக வெளியாகியிருந்தது. அதுதானா இது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
2 கிலோமீட்டர் தொலைவுக்கு
இந்த லாரிக்குப் பின்னால் வந்த வாகனத்தின் டிரைவர்தான் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இதைப் பின் தொடர்ந்து சென்று படம் பிடித்துள்ளார். தற்போது உக்ரைன் ராணுவத்தின் வசம் இந்த வீடியோ வந்துள்ளது.
பாதுகாப்புக்கு யாரும் இல்லை
இந்த லாரி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. அதாவது ராணுவ வீரர்களோ, புரட்சிப் படையினரோ உடன் வரவில்லை.
ரஷ்யக்காரர் படம் பிடித்தாரா
இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறுகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பிளாக்கர் ஒருவர் இதைப் படம் பிடித்துள்ளார். இதுதான் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய பக் ஏவுகணையாகும் என்று கூறியுள்ளது.
எந்த இடம்
லாரி சென்ற இடம் ரஷ்யாவைப் போலத்தான் உள்ளது. ஆனால் சரியாக எந்த இடம் என்பது தெரியவில்லை. ரஷ்யப் பகுதிக்குள் வைத்துத்தான் இதைப் படம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அழிக்கப்பட்டிருக்கலாம்
ஏற்கனவே தாக்குதலை நடத்திய பக் ஏவுகணை, அதன் ஏவுதளம் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு செய்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.