சவுதியில் சிக்கித் தவித்த தமிழரை மீட்ட இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத்: 18 மாதங்களாக ஊர் திரும்ப முடியாமல் சவுதியில் தவித்த தமிழரான ஆரோக்ய சாமி பீட்டர் இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டர் (60) சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 18 மாதங்களாக வேலையில்லாமலும், காலாவதியான தனது இகாமாவை முதலாளி புதுப்பிக்காமலும், இதனால் வெளியில் நடமாட முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். அவர் நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.

முறைப்படியான விசா இல்லாமல் 18 மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் ஆரோக்ய சாமியால் தாயகம் திரும்ப முடியாமல் போகவே இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் உதவியை நாடினார்.
இதையறிந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை சமூக நலத்துறை நிர்வாகிகள் அவரது பிரச்சினையை கவனத்தில் கொண்டு உடனடியாக சவுதி அரசின் காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியையும் பெற்று அவரை பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோபார் கிளையின் நிர்வாகி அப்துல் காதர் கடந்த 10.12.2015 அன்று ஆரோக்ய சாமிக்கான முறைப்படியான எக்சிட் வெளியேற்ற ஆணையை சவுதி அரசின் மூலம் பெற்று அவரை பாதுகாப்பாக புதுக்கோட்டைக்கு வழியனுப்பி வைத்தார்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை நிர்வாகிகளின் மனிதநேய சேவையை தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, மாநில தலைவர் காயல் அபுபக்கர், பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா ஆகியோர் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications