சவுதியில் சிக்கித் தவித்த கடையநல்லூர்காரரை மீட்ட இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத்: சவுதியில் சிக்கித் தவித்த கடையநல்லூர் வாலிபர் இந்தியன் சோஷியல் ஃபோரமின் உதவியுடன் ஊர் திரும்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த வாலிபர் அப்துல் ஹமீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவில் உள்ள தாயிஃப் பகுதிக்கு சென்றார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விடுமுறையில் ஊர் செல்ல உரிமையாளரிடம் கூறியபோது விமான பயணச் சீட்டு வழங்காமல் விடுமுறை விசா மட்டும் கொடுத்துள்ளார் அவர்.
விமான டிக்கெட் எடுக்க பலரிடமும் முயற்சித்து முடியாமல் போகவே தமது உறவினரை தேடி அல்ஹஸா பகுதிக்கு வந்தார் ஹமீது. இந்நிலையில் அப்துல் ஹமீது தன்னிடம் இருந்து தப்பியோடிவிட்டதாக உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.
வெளியில் வேலையும் செய்ய முடியாமல் ஊருக்கும் திரும்ப முடியாமல் தவித்த அப்துல் ஹமீது சமூக நல அமைப்பான இந்தியன் சோஷியல் ஃபோரம் அல் ஹஸா கிளையின் உதவியை நாடினார். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அங்கு தாமதமானதால் தம்மாம் தலைமையிடம் உதவி கோரப்பட்டு நேற்று ஊர் திரும்பினார்.
இந்திய தூதரகத்தை நேரடியாக அணுகி ஹமீதுக்கு எக்சிட் பெற்றுத் தந்ததுடன் அவருக்கான விமான டிக்கெட் பயண செலவுகளையும் இந்தியன் சோஷியல் ஃபோரம் அல் ஹஸா கிளை முழுமையாக ஏற்றுக் கொண்டது.
அல்ஹஸா கிளை நிர்வாகிகளின் மனித நேய சேவையை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, மாநில தலைவர் காயல் அபுபக்கர், பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா, இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தமிழ் மாநில தலைவர் சாதிக் மீரான் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டினர்.












Click it and Unblock the Notifications