வங்கதேசத்தில் இந்து பூசாரி தலை துண்டித்து கொலை.. கொன்றது ஐஎஸ் தீவிரவாதிகளா?
டாக்கா: வங்கதேசத்தில் இந்து கோவில் பூசாரி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள், இந்து கோவில் பூசாரி ஒருவரை தலையைத் துண்டித்துக் கொலை செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அந்த பூசாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் தலையை வெட்டித் தனியாக போட்டுள்ளனர். இந்திய எல்லையை ஒட்டி உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார் கொல்லப்பட்ட ஜெகனேஸ்வர் ராய்.

வங்கதேசத்தில், இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மீது ஐஎஸ்ஐஎஸ் நடத்தியுள்ள முதல் தாக்குதலாக இது கருதப்படுவதால் பரபரப்பு கூடியுள்ளது.
கொல்லப்பட்ட பூசாரியின் வயது 50 ஆகும். இவர் சோனாபோடா கிராமத்தைச் சேர்ந்தவர். இது வடக்கு பஞ்ச்கர் மாவட்டத்தில் உள்ளது. தலைநகர் டாக்காவிலிருந்து 494 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.
இந்த சம்பவத்தின்போது கோவிலில் இருந்த இரண்டு பக்தர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தனது இணையதளத்தில் கூறியுள்ளதாக அமெரி்க்காவைச் சேர்ந்த சைட் என்ற தனியார் உளவு அமைப்பு கூறியுள்ளது.
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ்தான் இதைச் செய்ததா என்பதை வங்கதேசம் இதுவரை விளக்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். முதலில் ராயின் வீட்டின் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர் வெளியே வந்துள்ளார். அப்போது அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் தலையைத் துண்டித்துள்ளனர்.
ராய்தான் இந்தக் கோவிலை கடந்த 1998ம் ஆண்டு கட்டி அவரே பூசாரியாக செயல்பட்டு வந்தார். வங்கதேசத்தில் இந்துக்களும், ஷியா முஸ்லீம்களும், சுபி பிரிவினரும் சிறுபான்மையினர் ஆவர். சன்னி பிரிவு முஸ்லீம்கள்தான் அங்கு பெரும்பான்மையினர் ஆவர்.
கடந்த 6 மாதங்களில் சிறுபான்மையினர் மீது நடந்துள்ள 5வது கொலை வெறித் தாக்குதல் இது. இந்து சமயத்தைச் சேர்ந்தவர் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications