கழுத்தை அறுத்து கொல்லும் கொடூரன் “ஜிகாதி ஜான்” மரணம் - உறுதி செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ்
பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அப்பாவிகள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் ரக்கா நகர் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது.
சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியினைத் தணித்துக் கொள்கின்றனர்.

பிணைய கைதிகள் கொடூரமாக கழுத்து அறுத்து கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டது.இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்யும் கொடூரன் ஜிகாதி ஜான் என்பது தெரியவந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் முக்கிய நபராக விளங்கும் ஜிகாதி ஜான் பிரிட்டனைச் சேர்ந்தவர்.
இவரது உண்மையான பெயர் முகம்மது எம்வாசி என்பதாகும். ஜிகாதி ஜானை குறிவைத்து சிரியாவின் வடக்கில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்க போர் விமானங்கள் கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. தங்கள் இயக்கத்தின் ஆன்லைன் இதழான தபீக்கில் ஜிகாதி ஜான் அமெரிக்கா தாக்குதலில் பலியானதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
சிரியா அரசுப்படை ஆதிக்கம் மிகுந்த ரக்வாவில் ஜிகாதி ஜான் காரில் சென்ற போது அந்த காரை குறிவைத்து ஆளில்லாவிமானம் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஜிகாதி ஜான் பலியானதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications