16 பணயக் கைதிகளை படு பயங்கரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்..
பாக்தாத் : உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், உயிரோடு நீரில் மூழ்கடித்தும், கழுத்தில் வெடிகுண்டுகளை கட்டி வெடிக்கச் செய்தும் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
தனி இஸ்லாமிய நாடு கோரி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கும் பணயக் கைதிகளை தலைகளைக் கொய்தும், துப்பக்கியால் சுட்டும், கூண்டில் வைத்து உயிரோடு தீ வைத்து எரித்தும் கொன்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஈராக்கின் நினேவே மாகாணத்தில் 16 பணயக் கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகள், தற்போது வெளியாகி உலகையே மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவின், முதல் காட்சியில் 4 பேரை அழைத்துச் செல்லும் தீவிரவாதிகள் அவர்களை ஒரு காரில் வைத்து பூட்டுகின்றனர். பின்னர் அந்த காருக்கடியில் ராக்கெட் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்து பணயக் கைதிகளை கொல்கின்றனர்.
2 வது காட்சியில், 5 பணயக் கைதிகளை இரும்புக் கூண்டுக்குள் வைத்து பூட்டி, அதனை கிரேன் மூலம் தூக்கி, அழுக்கான நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கடித்து கொல்கின்றனர். பணயக் கைதிகள் மூச்சுத் திணறி உயிரிழக்கும் காட்சிகளை 2 கேமிராக்கள் படம் பிடிக்கின்றன.
கொடூரத்தின் உச்சமாக, மண்டியிட்ட 7 பேரின் கழுத்தில் வெடி குண்டுகள் கட்டப்படுகின்றன. பின்னர் அந்த வெடி குண்டுகள் வெடிக்க வைக்கப்படுகின்றன. இதில் சிலரது தலைகள் துண்டாகி பல அடி தூரத்திற்கு சென்று விழுகின்றன.
இந்த கொடூர காட்சிகளை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் கேமிராக்கள் படம் பிடிக்கின்றன.
இந்த அதிபயங்கர காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உலகையே மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.