ரஷ்ய விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம்: அமெரிக்கா
கெய்ரோ: எகிப்தில் விபத்துக்குள்ளான விமானத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்றாலும் அவர்களின் ஈடுபாடு இல்லை என்று கூறிவிட முடியாது என அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய ரஷ்ய விமானம் சினாய் மாகாணத்தில் நடுவானில் இரண்டாக உடைந்து தரையில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தில் இருந்தவர்களில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் சினாய் மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளோ, தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ட்விட்டரில் தெரிவித்தனர். விமானத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அதே சமயம் விமானம் வெளியே இருந்து வந்த ஏதோ ஒன்றால் தான் விபத்துக்குள்ளானதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறுகையில்,
தீவிரவாதிகள் விமானத்தை தாக்கியிருக்க முடியாது. அதே சமயம் அவர்களின் ஈடுபாடு இல்லை என்றும் கூறிவிட முடியாது. சினாய் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளனர் என்றார்.