அமெரிக்க விமானத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கீர் அல் பக்தாதி படுகாயம்
பாக்தாத்: அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கீர் அல் பக்தாதி படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஐஎஸ் அமைப்புக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் பக்தாதி காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் மாதம் மேற்கு ஈராக்கில் உள்ள சில நிலைகளைக் குறி வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் விமானத் தாக்குதலை நடத்தினர். இதில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு பக்தாதி காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தனது அமைப்பின் தினசரி நடவடிக்கைகளை நேரில் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் முன்பை விட அவர் தற்போது குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கூட அவரால் நடமாட முடியாத அளவுக்கு உடல் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
முதலில் பக்தாதி பிழைக்க மாட்டார் என்று ஐஎஸ் உயர் மட்டத் தலைவர்கள் கருதி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசித்து வந்தனர். இருப்பினும் தற்போது அந்த முடிவை அவர்கள் கைவிட்டுள்ளதாக தெரிகிறது என்று அந்த செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் கூட இதேபோல பக்தாதி காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போதும் அதேபோன்ற செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை வளைத்து புதிய இஸ்லாமிய குடியரசை ஐஎஸ் நிறுவியது. அதன் பின்னர் அதன் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் போய் வருகின்றன. பலரை தலையைத் துண்டித்தும். சுட்டும் கொன்று குவித்து வருகிறது இந்த அமைப்பு.
இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விமானத் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றன. மிக மிக அரிதாக வெளியுலகில் தலை காட்டுவார் பக்தாதி. கடந்த ஜூலை மாதம் ஒரு மசூதியில் தோன்றி அவர் பேசியிருந்தார். அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் விலை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications