பாக்தாதை நோக்கி படையெடுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ரமாதி நகரை கைப்பற்றிய பிறகு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் தலைநகர் பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஈராக்கில் உள்ள அன்பார் மாகாணத்தின் தலைநகரும், பெரிய நகருமான ரமாதியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஈராக் ராணுவத்தால் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. ராணுவம் போராடிப் பார்த்தும் ரமாதி நகர் தீவிரவாதிகளின் வசம் சென்றுவிட்டது.
இந்நிலையில் தீவிரவாதிகள் பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை தடுத்து நிறுத்த ரமாதி நகர் அருகே உள்ள ராணுவ தளத்தில் 3 ஆயிரம் ஷியா ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நெருங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் ஹைதர் அல் அபாதி செய்துள்ளார்.
அபாதியின் உத்தரவுப்படி தான் ஷியா ராணுவத்தினர் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இருப்பினும் தீவிரவாதிகள் தங்கள் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள்.
ரமாதி நகரை கைப்பற்ற நடந்த போரில் தீவிரவாதிகள் பக்கம் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தங்களின் வெறித்தனம் குறையாமல் செயல்பட்டு வருகின்றனர்.