ஜப்பானிய பிணை கைதிகளை விடுவிக்க 200 மில்லியன் டாலர்... பேரம் பேசும் ஐஎஸ்ஐஎஸ்!
கெய்ரோ: ஜப்பானை சேர்ந்த பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிணைத் தொகையாக தர வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் மிரட்டல்விடுத்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த கோடோ என்ற பத்திரிகையாளர், சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்தார். இவரையும், சிரியாவில் தனியார் மிலிட்டரி கான்ட்ராக்டராக வேலை பார்த்த யுகாவா என்ற ஜப்பானியரையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடத்திச் சென்றனர்.

வீடியோ வெளியீடு
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபி தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் துவக்கியுள்ளார். அவர் இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில், ஒரு வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.

கத்தி முனையில்
அந்த வீடியோவில் கடத்தப்பட்ட இரு ஜப்பானியர்களையும் தீவிரவாதிகள் கத்திமுனையில் பிடித்து வைத்துள்ள காட்சி பதிவாகியுள்ளது. அதில் பேசியுள்ள தீவிரவாதிகள், ஜப்பான் பிரதமருக்கும், குடிமக்களுக்குமாக தனித்தனி மெசேஜ்களை கொடுத்துள்ளனர். முகமூடி அணிந்த தீவிரவாதி பேசுவதாக அந்த தகவல்கள் அமைந்துள்ளன.

பிரதமருக்கு மெசேஜ்
பிரதமருக்கான செய்தியில் "இந்த கொலைக்கு நீங்கள் தானாக முன்வந்து உடந்தையாகிவிட்டீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் மக்களே கேளுங்கள்....
ஜப்பான் நாட்டு மக்களை நோக்கி பேசுவது போன்ற செய்தியில், "ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உங்கள் அரசு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி முட்டாள்தனம் செய்துவிட்டது. எனவே, உங்களது சக குடிமகன்கள் உயிரை காப்பாற்ற வேண்டுமானால் 72 மணி நேரத்திற்குள் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை எங்களுக்கு அளித்து புத்திசாலித்தனமான முடிவை உங்கள் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள்தான் நெருக்கடி கொடுக்க வேண்டும். அல்லது இந்த கத்தி உங்களின் தூக்கத்தை கெடுக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

உயிர் முக்கியம்
இந்த மிரட்டல் குறித்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபியிடம் கருத்து கேட்டதற்கு, எங்கள் நாட்டு குடிமக்கள் உயிர் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். ஆனால், பிணையத் தொகையை அளிக்க ஜப்பான் தயாராகியுள்ளதா, இல்லையா என்பதை நேரடியாக அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். மற்றொருபக்கம், வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியில் ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல முன்பு
2004ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் ஈராக்கில், ஜப்பான் நாட்டவர்களை படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தையும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போதைய வீடியோவில் நினைவுகூர்ந்து மிரட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications