மோதும் நாடுகளுக்கே கள்ள சந்தையில் கச்சா எண்ணெய் விற்று செய்து பணம் பார்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.!
வாஷிங்டன்: சிரியா போன்ற நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டே அந்த நாடுகளுக்கு கள்ளச் சந்தையில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து பெருமளவு நிதியை குவித்து வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். இந்த இயக்கம்தான் இன்று அதிக வருவாய் உள்ள பணக்கார தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளது.
அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கணிசமான நிதி கிடைக்கிறது. ஆனால் சிரியா, ஈராக்கில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளோ நாளொன்றுக்கு 50 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல்களை சொந்தமாக உற்பத்தி செய்து பெரும் நிதி சேகரிக்கின்றனர்.
இந்த கச்சா எண்ணெய் பேரல்களை கள்ளச் சந்தையில் விற்பதன் மூலம் ஒருநாளைக்கு 1 மில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை இந்த இயக்கத்தால் திரட்ட முடிகிறது. ஈராக்கின் குர்திஸ்தான், சிரியாவுடன்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் யுத்தம் நடத்துகிறது.
இந்த பகுதிகளில் உள்ள கள்ளச் சந்தை வர்த்தகர்கள் மூலமே கச்சா எண்ணெய் விற்பனையையும் கனஜோராக மலிவான விலையில் விற்பனை செய்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த இயக்கத்தின் பிரதான விற்பனையாளர்களில் ஒரு நாடு சிரியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் உலகின் மிகப் பெரும் பணக்கார தீவிரவாத குழுவாக இந்த இயக்கம் விஸ்வரூபமெடுத்துள்ளது. மேலும் வெளிநாட்டு செய்தியாளர்களைக் கடத்தியும் பெருமளவு பணத்தை பிணையத் தொகையாகவும் இந்த இயக்கம் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications