State of war.. நாட்டை நோக்கி பாய்ந்த 5000 ஏவுகணைகள்.. போர் நிலை அறிவித்தது இஸ்ரேல்.. பதற்றம்
டெல் அவிவ்: காசா பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தொடர் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் அங்கே போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பார்க்கும் போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாகக் காசா பகுதியில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட, நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய காசா பகுதியை தங்களுடையது என இஸ்ரேல் உரிமை கொண்டாடுகிறது. இருப்பினும், அது தங்களுடையது என்றும் தங்கள் இறையாண்மையில் இஸ்ரேல் தலையிடுவதாக பாலஸ்தீன் குற்றஞ்சாட்டியது.
மோதல்: இந்த மோதல் தொடரும் நிலையில் பாலஸ்தீனை சேர்ந்த ஹமாஸ் படையை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதற்கிடையே இன்று இந்த காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. காலை 6 மணி முதலே காசாவின் பல இடங்களில் இருந்து ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வந்துள்ளது. இந்த தொடர் ஏவுகணை தாக்குதலையடுத்து, இஸ்ரேலில் போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரத்தில் காசா பகுதியில் இருந்து 5000 ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் நாட்டில் ஊடுருவியதாகவும் இஸ்ரேல் எச்சரிக்கை
ஏவுகணை தாக்குதல்: இன்றைய திணம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை தான் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அவர்களே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். அதிகாலையில் தொடங்கிய இந்த தாக்குதல் அடுத்த சில மணி நேரத்திற்கு நீடித்துள்ளது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பலரும் இந்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டே பயந்து எழுந்துள்ளனர்
மேலும், ஹமாஸ் படை இஸ்ரேல் நாட்டில் ஊடுருவி விட்டதாகவும் அவர்கள் சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்று வருவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதிலடி தரும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
பதிலடி தருவோம்: இந்தத் தாக்குதல் நடந்தவுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஹமாஸ் படைகள் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் துல்லியமாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இஸ்ரேலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் படை சொல்வது என்ன: இந்த தாக்குதலில் முதல் 20 நிமிடங்களில் மட்டும் 5000 ஏவுகணைகளை அனுப்பியதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஹமாஸ் படைப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டை ஆக்கிரமித்து இஸ்ரேல் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்தாண்டு ரஷ்யா திடீரென போரை ஆரம்பித்து இருந்தது. அதன் பிறகு சர்வதேச அளவில் நடைபெறும் மிக பெரிய மோதலாக இது இருக்கிறது. இந்த மோதல் முடிந்து அங்கு அமைதி திரும்பவே பல மாதங்கள் ஆகலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications