இஸ்ரேல் வைத்த ட்விஸ்ட்.. பயந்துபோன ஹமாஸ்.. 3 மணிநேரம் தாமதமாக அமலுக்கு வந்த காசா போர் நிறுத்தம்
டெல்அலிவ்: இஸ்ரேல் - காசா இடையே கடந்த 15 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. இருதரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இன்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக 3 மணிநேர தாமதத்தக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் அருகருகே உள்ளன. இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து வருகின்றனர். இருநாடுகளுக்கும் இடையே எல்லைபிரச்சனை உள்ளது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதேபோல் இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடுத்தது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளுக்குள் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பிணை கைதிகளாக பலரை பிடித்து சென்றனர்.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காசா மீது போரை அறிவித்தார். இஸ்ரேல் நாட்டின் படைகள் காசா மீது உடனடியாக தாக்குதலை தொடங்கியது. கடந்த 15 மாதங்களாக இருதரப்பு இடையே போர் நடந்து வந்தது. இந்த தாக்குதலில் காசாவில் 46,000 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். இஸ்ரேல் 1,600 பேரை பலி கொடுத்துள்ளது. அதோடு காசாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர பல லட்சம் பேர் உயிருக்கு பயந்து காசாவை காலி செய்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயன்றன. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கேட்கவில்லை. இறுதியாக போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்த நிலையில் இருதரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு நேற்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி இன்று காலை முதல் இஸ்ரேல் - காசா இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நேரப்படி காலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் என்பது அடுத்த 42 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். மேலும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பல்வேறு கண்டிஷன்கள் உள்ளன. அதில் முக்கியமானது பிணைக்கைதிகளை விடுவிப்பதாகும். இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் பிடித்து சென்ற மக்களை ஹமாஸ் விடுவிக்க உள்ளது. மொத்தமுள்ள 99 பிணைக்கைதிகளில் 33 பிணைக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இதில் காயமடைந்துள்ள பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி முதற்கட்டமாக இன்று மாலை 3 பெண் பிணைக்கைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. 737 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் அவர்களை விடுவிக்க உள்ளது. அதேபோல் காசா எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போர் நிறுத்த காலத்தில், காசாவில் மனிதாபிமான உதவிகளை செய்ய ஐநா திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் பிணைக்கைதிகள் குறித்த பட்டியலை ஹமாஸ் வழங்காவிட்டால் போர் நிறுத்தம் அமல் செய்யப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து இருந்தார்.
போர் நிறுத்தத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பே பிணைக்கைதிகளின் லிஸ்ட்டை வழங்க இஸ்ரேல் கோரியிருந்தது. ஆனால் ஹமாஸ் வழங்கவில்லை. இன்று காலைக்குள் லிஸ்ட் வரும் என்று இஸ்ரேல் வரும் என்று எதிர்பார்த்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் தான் போர் நிறுத்தம் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த தகவலை இன்று காலை போர் நிறுத்தம் தொடங்கும் சிறிது நேரத்துக்கு முன்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ஹமாஸ் இஸ்ரேல் பிணைக்கைதிகளின் பெயர்களை வழங்கும் வரை காசா போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வராது'' என்று கூறியுள்ளார். ஹமாஸ் தரப்பில் ‛‛தொழில்நுட்ப காரணங்களால் பிணைக்கைதிகளின் விபரங்கள் என்பது வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
இதனால் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை தொடங்கி நடத்தியது. இன்று நடத்திய தாக்குதலில் காசாவில் 10 பேர் வரை பலியாகினர். அதன்பிறகு உடனடியாக பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலிடம் வழங்கியது. இதையடுத்து நம் நாட்டின் நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இன்று மதியம் 12 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டிய நிலையில் பிணைக்கைதிகளின் பெயர் பட்டியல் தாமதத்தால் 3 மணிநேரம் தாமதமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காசா மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு இந்த போர் நிறுத்தத்தை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.












Click it and Unblock the Notifications