ஜெருசலேத்தில் இறங்கிய தீவிரவாதிகள்.. நொடிப்பொழுதில் பறிபோன 6 உயிர்கள்.. இஸ்ரேலில் என்ன நடந்தது?
ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20+ பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகப் போர் தொடரும் நிலையில், அது முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.

6 பேர் உயிரிழப்பு
இதற்கிடையே ஜெருசலேத்தில் நேற்று மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் அருகே பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் இருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த அப்பாவி மக்களைக் குறிவைத்து இவர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாகச் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது உயிரிழந்தனர். இதன் மூலம் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மேலும், ஏழு பேர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
என்ன நடந்தது?
அங்கு இயக்கப்படும் எகட் பேருந்து 62 என்ற பஸ்ஸில் ஏறி தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால் பொதுமக்கள் பயந்து போய் ஓடினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர் அந்த தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவி பிரிவினர் அங்குக் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யார் அவர்கள்?
இந்த மோசமான தாக்குதலை நடத்தியவர்கள் வெஸ்ட் பேங்க் பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்த வெளியிட்டுள்ளது.. கார் மூலம் பேருந்து நிலையத்திற்கு வந்த அவர்கள், திடீரென அப்பாவி மக்களை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்று இஸ்ரேலிய காவல் துறையினர் அடையாளம் கண்டபோதிலும், அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை.
பிரதமர் மோடி கண்டனம்
இந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இன்று ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம். இந்தியா அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறது. தீவிரவாதத்தை ஒழிப்பதில் எந்தவொரு சமரசமும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications