24 வருஷம் கழித்தும் பழிவாங்கிய இஸ்ரேல்.. இரு வீரர்களை கொன்ற பாலஸ்தீன இளைஞர் ஏவுகணை தாக்குதலில் பலி
டெல் அவிவ்: கடந்த 2000ம் ஆண்டு பாலஸ்தீன நகரமான ரமல்லாவில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் இப்போது பழிவாங்கியுள்ளது. இஸ்ரேல் வீரர்களைக் கொன்ற அஜீஸ் சல்ஹா என்பவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பழி வாங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

24 வருடத்திற்குப் பின் பழிதீர்ப்பு: குறிப்பாகக் காசா மற்றும் லெபனானில் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே காசாவில் நடந்த வான்வழித்தாக்குதலில் அஜீஸ் சல்ஹா என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தன. கடந்த 2000ம் ஆண்டு பாலஸ்தீன இயக்கத்தினர் தீவிரமடைந்த போது இவர் பாலஸ்தீன நகரமான ரமல்லாவில் வைத்து இரு இஸ்ரேல் வீரர்களைக் கொன்றார். அது அப்போது மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைக் கொன்று இஸ்ரேல் பழிதீர்த்துள்ளது.
இஸ்ரேல் அறிக்கை: இது இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 2000 அக்டோபர் மாதம், மத்திய காசாவில் அரங்கேறிய ரமல்லா படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜீஸ் சல்ஹா என்பவரை ஒழித்துவிட்டோம். 2000ம் ஆண்டு ரமல்லா நகரில் சார்ஜென்ட் யோசப் அவ்ரஹாமி மற்றும் கார்போரல் வாடிம் நோர்சிச் ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். கொலைக்குப் பின்னர் ரத்தம் படிந்த கைகளோடு அஜீஸ் சல்ஹா போட்டோ எடுத்தார். சல்ஹா தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: இஸ்ரேல் குறிப்பிட்ட இந்த படுகொலை சம்பவம் கடந்த 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் பாலஸ்தீனிய எழுச்சி என்று சொல்லப்படும் போராட்டம் தொடங்கிய சமயத்தில் இது நடந்தது.
அப்போது யோசெப் அவ்ரஹாமி மற்றும் வாடிம் நார்ஜிக் ஆகிய இஸ்ரேல் வீரர்கள் தவறுதலாக ரமல்லா நகருக்குள் நுழைந்துவிட்டனர். இதையடுத்து அவர்களின் பாதுகாப்பிற்காக உள்ளூர் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். இருப்பினும், இஸ்ரேல் உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவவே சுமார் 1000+ பாலஸ்தீனர்கள் அங்குத் திரண்டனர்.

கொடூர கொலை: உள்ளே புகுந்த பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் வீரர்களை மிருகத்தனமாக தாக்கி கொலை செய்தனர். அவர்கள் உடல்களும் சிதைக்கப்பட்டன. அப்போது ரத்தம் படிந்த கைகளோடு எடுக்கப்பட்ட சல்ஹா போட்டோ சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. அப்போது வன்முறை எந்தளவுக்குத் தீவிரமாக இருந்தது என்பதைக் காட்டுவதாக அந்த போட்டோ இருந்தது.
விடுவிப்பு: அப்போதே இஸ்ரேல் படைகள் சல்ஹாவை கைது செய்தது. அவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் அவர் சிறையில் தான் இருந்தார். இருப்பினும், அப்போது இஸ்ரேல் வீரர் ஒருவரை ஹமாஸ் சிறை பிடித்த நிலையில், சல்ஹா விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொரு முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நாசர் அபு ஹமீத், டிசம்பர் 2022இல் புற்றுநோயால் உயிரிழந்தார்.
இந்தச் சூழலில் தான் இப்போது சல்ஹா கொலை செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் சல்ஹாவை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்ததா இல்லை பரந்த ராணுவ நடவடிக்கையில் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து இஸ்ரேல் தெளிவுபடுத்தவில்லை.












Click it and Unblock the Notifications