அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்? டிரம்ப் - புதின் நட்பால் மேஜர் முடிவு.. வேறு 5 நாடுகளும் அதிரடி
டெல்அலிவ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நட்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும், அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளது. இப்படியான சூழலில் உளவு தகவல்களை பகிர்வதில் இஸ்ரேல் உள்பட 6 நாடுகள் முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இதன்மூலம் அமெரிக்கா -இஸ்ரேல் இடையேயான உறவில் விரிசல் வரலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா 3 ஆண்டுகளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் நடவடிக்கையால் அமெரிக்காவும், ரஷ்யாவும் எலியும், பூனையுமாக மாறின. உக்ரைன் போருக்கு அமெரிக்கா கடும் எதரிப்பு தெரிவித்தது. போரை நிறுத்த வேண்டும் என்று கூறியது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்கவில்லை. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்தது.

அதேபோல் அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி ரஷ்யாவை எதிர்கொள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியை செய்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த கருத்துடன் ஒன்றாக உக்ரைன் பக்கம் நின்றன. இவை அனைத்தும் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருக்கும் வரை மட்டுமே நீடித்தது.
ஆனால் இப்போது அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் அதிபரானது முதல் நிலைமை தலைகீழாக மாற தொடங்கியது. உக்ரைனை கடுமையாக விமர்சித்த டிரம்ப், ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் புதினிடம் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு இருநாட்டு பிரதிநிதிகளும் சவுதி அரேபியால் சந்தித்து பேசினர். போர் நிறுத்தம், இருதரப்பு வர்த்தக உறவு பற்றி விவாதித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளையும், உக்ரைனும் அவர் கழற்றி விட்டார்.
இதனால் அமெரிக்கா மீது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியடைந்தன.
இதன் ஒருபகுதியாக தான் விரைவில் அமெரிக்காவுடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதை குறைக்க இஸ்ரேல் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி என்பிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்காவும், இஸ்ரேலும் நீண்டகால நட்பு நாடுகள். இருநாடுகள் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இதனால்தான் டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அதிபரானதுமே முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்து பேசினார். ஆனால் இப்போது இருதரப்புக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான உறவு என்பது அதிகரித்து வருவது தான். ரஷ்யா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவு என்பது அவ்வளவு சுமூகமானதாக இல்லை. அதாவது இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் கடும் மோதல் உள்ளது. ஆனால் ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. எனவே இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு ரஷ்யா மறைமுகமாக ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு உதவி வருவதாக இஸ்ரேல் நம்புகிறது.
இதனால் ரஷ்யாவை பிளாக் லிஸ்ட்டில் இஸ்ரேல் வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவை இஸ்ரேல் ரசிக்கவில்லை. அதுமட்டுமின்றி தாங்கள் கூறும் உளவு தகவல்கள் என்பது அமெரிக்கா மூலமாக ரஷ்யாவுக்கு கசியலாம் என்று இஸ்ரேல் நினைக்கிறது. இதனால் முதற்கட்டமாக அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளும் உளவு தகவல்களை குறைக்க இஸ்ரேல் முடிவு செய்து அதுபற்றி முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதவிர காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை பேச்சுவார்த்தை மூலம் டிரம்ப் நிறுத்தினார். இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருங்கிய கூட்டாளிகள். இதனால் இஸ்ரேல் -காசா பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டிரம்ப் முடிவு செய்தார். இதனால் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். காசாவை அமெரிக்கா கைப்பற்றும். காசாவில் உள்ள மக்களை எகிப்து, ஜோர்டான் நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். காசாவை அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்து வீடுகள் கட்டி கொடுக்கும் என்று கூறினர். இது இஸ்ரேலுக்கு ஹேப்பியான செய்தியாக அமைந்தது. இஸ்ரேலும் அதனை வரவேற்றது. ஆனால் இப்போது அமெரிக்கா காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்புடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதில் இஸ்ரேலை கழற்றிவிட்டுள்ளது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதை குறைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூலாந்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலமாக அமெரிக்காவுடன் நல்ல நட்பில் உள்ளன. இந்த நாடுகள் என்பது அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவை 5 கண் உளவு பிரிவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு இந்த நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவும் மோசமாகி உள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக டொனால்ட் டிரம்ப் திரும்பியதை பிரிட்டன், நியூசிலாந்து ஆஸ்திரேலியா நாடுகள் ரசிக்கவில்லை.
அதேபோல் அதிகபட்டியான வரிவிதிப்பு மற்றும் உக்ரைனை கைவிட்டதை கனடா விரும்பவில்லை. இஸ்ரேல் போருக்கு நடுவே காசாவை கைப்பற்றுவதாக டிரம்ப் அறிவித்ததை சவுதி அரேபியா ஏற்கவில்லை. இதனால் இந்த நாடுகளும் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்வதை ஏற்கனவே மறுபரிசீலனை செய்ய தொடங்கி விட்டன. இந்த நாடுகளின் வரிசையில் தற்போது இஸ்ரேலும் இணைந்துள்ளது. இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் செயல்பாட்டால் விரைவில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ள இஸ்ரேல், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு அது சிக்கலை ஏற்படுத்தும்.
இருப்பினும் இஸ்ரேல் அதிகாரி இந்த தகவலை மறுத்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. முக்கியமான உளவுத்துறை தரவுகளை பகிர்வது உள்பட அனைத்து மட்டங்களிலும் எப்போதும் போலவே இருநாடுகள் இடையேயான உறவு வலுவாக உள்ளது'' என்றார். அதேபோல் பிரிட்டன் மற்றும் கனடாவும் இந்த தகவல்களை மறுத்துள்ளன. நியூசிலாந்து, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து எந்த கருத்துகளும் கூறப்படவில்லை. இருப்பினும் தற்போது அமெரிக்கா மற்றும் அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்த நாடுகள் அதிருப்தியில் உள்ளது உண்மை தான். இதனால் வெளியில் கூறாமல் இந்த நாடுகள் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை நிறுத்தலாம் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications