400 கிலோ யுரேனியம்.. ஈரான் அதை எங்கே எடுத்து சென்றிருக்கும்? அமெரிக்காவை குழப்பிவிடும் காமெனி
தெஹ்ரான்: ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால், இந்த மையங்களில் இருந்த செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியத்தை ஈரான் பத்திரமாக வேறு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகளே முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்து வருகிறார்கள்.
நாடன்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்பஹான் என மூன்று அணு ஆய்வு யைமங்கள் ஈரானில் இருக்கின்றன. இதில் முதல் இரண்டு மையங்களில் யுரேனியம் செறிவூட்டல் நடக்கிறது. மூன்றாவது மையத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

டம்மி தாக்குதல்
இந்த மையங்கள் மீது முதலில் இஸ்ரேலும் பின்னர் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் மூன்று மையங்களும் முழுமையாக அழிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால், பலத்த சேதங்கள்தான் அடைந்துள்ளதே தவிர, அழிக்கப்படவில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல்லாம் ஓகேதான். அங்கிருந்த 400 கிலோ யுரேனியம் என்ன ஆனது? என்பதுதான் தற்போதைய கேள்வி.
புதிய வழிமுறைகள்
இவ்வளவு யுரேனியமும் சுமார் 60% வரை செறிவூட்டப்பட்டிருக்கிறது. இதனை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்தால் 10 அணு ஆயுதங்களாக மாற்ற முடியும். இந்த யுரேனியம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் சொன்னாலும், அமெரிக்க உளவுத்துறை இதனை ஏற்கவில்லை. என்னைக்கு இருந்தாலும் நம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் உணர்ந்துதான் இருந்தது. எனவே யுரேனியத்தை பாதுகாக்க அது புதிய வழிமுறைகளை கையாண்டு இருக்கும் என்று உளவுத்துறை கூறியுள்ளது.
அமெரிக்க அரசின் அணுகுமுறை
எனவேதான், இந்த தாக்குதலுக்கு பிறகு யுரேனியம் குறித்து ஈரானுடன் அமெரிக்கா பேச விரும்புகிறது என்று அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார். இந்த யோசனைக்கு அரசு நிர்வாகம் அவசர அவசரமாக மறுப்பு சொன்னது. அரசின் மறுப்புக்கு காரணம் டிரம்பின் உறுதியான பேச்சுதான். அதாவது,
சமாளிக்கும் டிரம்ப்
"ஃபோர்டோ மீது நடந்த தாக்குதலில் யுரேனியம் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மண்ணோடு புதைந்து போய் இருக்கலாம். அங்கிருந்து எதுவும் வெளியே போகவில்லை. அப்படி கொண்டு செல்ல முயன்றிருந்தால் நீண்ட நேரம் எடுத்திருக்கும். அது ஆபத்தானது, மிகவும் கனமாகவும், கடினமாகவும் இந்திருக்கும்" என்று கூறியுள்ளார். இவரது கருத்தை பிரதிபலித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், "எங்கள் உளவு அமைப்புகள் ஈரானின் அணு உலைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. செறிவூட்டப்பட்ட யுரேனியம், தாக்குதலுக்கு முன்பு மாற்றப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இதுவரை கிடைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
அதிகாரிகளின் மறுப்பு
ஆனால் அமெரிக்க அதிகாரிகள், "நாங்கள் நடத்திய தாக்குதலில் அணு ஆய்வு மையங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன. ஆனால், அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. எனவே ஈரானியர்கள் எவ்வளவு யுரேனியத்தை தக்கவைத்துள்ளனர் என்பது குறித்து உளவுத்துறை இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை" என்று கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பிரிக்கப்பட்ட யுரேனியம்
வேறு சிலரோ, யுரேனியம் எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதே அமெரிக்காவுக்கு தெரியாது. ஃபோர்டோவில் இருந்ததாக டிரம்ப் கூறுகிறார். சிலர் நடான்ஸில் இருந்ததாக தெரிவித்தனர். இஸ்ஃபஹானில் இருந்ததாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இன்னும் சிலர், மூன்று இடங்களிலும் யுரேனியம் பிரித்து வைக்கப்பட்டிருந்தது என்று சொல்கிறார்கள்.
கார் டிக்கி
சர்வதேச அணுசக்தி முகமையும் (IAEA) இதையேத்தான் கூறியுள்ளது. "எங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்தால், யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றுவோம்" என்று ஈரான் தங்களிடம் கூறியதாக IAEA இயக்குனர் ஜெனரல் தெரிவித்திருந்தார். இந்த யுரேனியத்தை இடம் மாற்றுவது டிரம்ப் சொல்வதை போல அவ்வளவு கஷ்டமான வேலை ஒன்றும் இல்லை. சாதாரண கார் டிக்கியில் கூட இதை எடுத்து சென்றிருக்க முடியும். இஸ்ஃபஹான் ஆய்வு மையத்திலிருந்து சில நாட்களுக்கு முன்னர் வழக்கத்திற்க மாறாக எதையோ எடுத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்றும் IAEA தெரிவித்திருக்கிறது.
எங்கே யுரேனியம்
60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானின் மிக மதிப்புமிக்க தேசிய சொத்து. அதை ஒரே இடத்தில் விட்டு வைத்திருக்க கூடாது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும். எனவே இதனை ஈரான் யோசித்திருக்காதா என்ன? என்று IAEA கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்வியில் நியாயம் இருக்கிறது. அப்படியெனில் அந்த யுரேனியம் எங்கே?
இதை வைத்துதான் மேற்கு நாடுகளிடம் பேரம் பேசவும், அந்நாடுகளை வழிக்கு கொண்டுவரவும் முடியும் என்பதால் அதை நிச்சயம் ஈரான் எங்காவது பதுக்கி வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications