ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்- வரலாற்றில் கருப்பு நாள்... குய்யோ முறையோ கூப்பாடு போடும் இஸ்ரேல்
ஜெருசலேம்: அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது வரலாற்றில் கருப்பு நாள் என்று குமுறி வருகிறது இஸ்ரேல்.
ஈரான் அணு குண்டு தயாரிக்கத்தான் அணுசக்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் முதலில் புகார் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளும் ஈரான் மீது குற்றம்சாட்டின. ஆனால் அதை அந்நாடு மறுத்தது.
இதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. நீண்டகாலம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை முடிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் இந்த ஒப்பந்தம் உருவான நாள்.. வரலாற்றின் கருப்பு நாள் என இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஈரான் இனி அணுஆயுதங்களை எளிதாக தயாரித்துவிடும். இனி ஈரான் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பெற்றுவிடும். அது பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்தும் என்று சாடியுள்ளார்.
இஸ்ரேலின் கல்வி அமைச்சர் நஃப்டாலி கூறுகையில், உலகில் அணுஆயுதங்களைக் கொண்ட ஒரு பயங்கரவாத தேசம் பிறந்துவிட்டது... உலக வரலாற்றில் இன்று கருப்பு நாள் என்று கொந்தளித்துள்ளார்.
இதேபோல் இஸ்ரேல் நாட்டு சமூக வலைதளங்களும் மிகக் கடுமையாக இந்த ஒப்பந்தத்தை விமர்சித்து வருகின்றன. மேலும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.