ஜகா வாங்கிய அமெரிக்கா, ஈரானுக்கு சப்போர்ட்டுக்கு வந்த ஜப்பான்! தனித்துவிடப்படுகிறதா இஸ்ரேல்?
டெல் அவிவ்: இன்று அதிகாலை, ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலால் ஈரான் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றிருக்கும் நிலையில், அமெரிக்கா இவ்விஷயத்தில் இருந்து ஒதுங்கியுள்ளது. அதன் நட்பு நாடான ஜப்பான் ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்க, இஸ்ரேல் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா சொன்னது என்ன?
வழக்கமாக இஸ்ரேலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, இந்த முறை, "இஸ்ரேலின் தன்னிச்சையான செயல்பாடு இது" என சொல்லி, தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியிருக்கிறது.

அதாவது, "இன்று இரவு இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக தன்னிச்சையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் (அமெரிக்கா) ஈடுபடவில்லை. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை பாதுகாப்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும். இந்த நடவடிக்கை தங்களின் தற்காப்புக்கு அவசியமானது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. மேலும் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்.
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது படைகளையோ குறிவைக்கக் கூடாது" என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
ஜப்பானின் கண்டனம்
இதை தொடர்ந்து, அணுசக்தி அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதை ஜப்பான் கண்டித்திருக்கிறது. "ஈரானிய அணுசக்தி பிரச்சினைக்கு அமைதியான தீர்வைக் காண, தொடர்ச்சியான வெளியுறவுத்துறை முயற்சிகள் அவசியம். இதற்கிடையில் ராணுவ வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. நிலைமையை மேலும் மோசமாக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஜப்பானுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், பொறுமையை கடைப்பிடித்து நிலைமையை அமைதிப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா கூறியுள்ளார்.
ஜப்பானுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஈரானிலிருந்துதான் செல்கிறது. ஈரான் 90% அளவுக்கு ஜப்பானின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்கிறது. இப்படி இருக்கையில், இஸ்ரேலின் தாக்குதல் எண்ணெய் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். எனவேதான் ஜப்பான் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக பார்க்கப்படும் ஜப்பான், இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பது, உலக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
அதிருப்தி தெரிவித்த ஆஸ்திரேலியா
அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், "இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரிப்பால் ஆஸ்திரேலியா பீதியடைந்துள்ளது. ஏற்கனவே நிலையற்றதாக இருந்த மத்திய கிழக்கு பகுதியை இந்த தாக்குதல், மேலும் சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்தும் கண்டனம்
"இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருப்பது குறித்து நியூசிலாந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும் பழிவாங்கும் நடவடிக்கை போரின் அபாயத்தை அதிகரிக்கும். இது மத்திய கிழக்கில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தைத் தணிப்பதற்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியம். பாதுகாப்புக்கான சிறந்த வழி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் (ongoing talks) தான்.

இந்தச் செய்திகளை நியூசிலாந்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு எங்கள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். ஈரானில் உள்ள நியூசிலாந்துப் பணியாளர்கள் பாதுகாப்பில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வெளியுறவுத்துறை அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் x பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு நாடாக இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது, மத்திய கிழக்கில் இஸ்ரேல் தனித்து விடப்படுவதற்கான அறிகுறி என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications