ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி? இஸ்ரேல் புதிய பாதுகாப்பு அமைச்சர் பகீர்.. தகிக்கும் மத்திய கிழக்கு
டெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இஸ்ரேல் காட்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி இருக்கிறார். இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர் ஈரான் நாட்டின் அணு ஆயுதங்கள் குறித்துக் கூறியிருக்கும் கருத்துக்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி இஸ்ரேல் பிரதமர் இந்த நடவடிக்கை எடுத்திருந்தார். மேலும், இஸ்ரேல் காட்ஸ் என்பவர் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர்: இதற்கிடையே புதிதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் காட்ஸ் ஆரம்பத்திலேயே ஈரான் தொடர்பாக சில அதிரடி கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் டாப் அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்திய அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இன்று எனது முதல் சந்திப்பில் ராணுவ ஜெனரல் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் இருக்கிறது.. இதன் மூலம் எங்களின் மிக முக்கியமான இலக்கை, அதாவது இஸ்ரேல் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை அகற்றும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அணு ஆயுதம் இருக்கா: ஈரான் இப்போது வரை ஒரு அணு ஆயுத நாடு இல்லை.. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும், ஈரான் இதைத் தொடர்ந்து மறுத்தே வருவது குறிப்பிடத்தக்கது. ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும் அது அதிகபட்சம் சில ஆண்டுகளில் அணு ஆயுதங்களை உருவாக்கும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகம் உற்பத்தி செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் மேற்குலக நாடுகளுடன் ஈரான் அணு சக்தி சார்ந்து முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டு இருந்தது. தனது அணுசக்தி நிலையங்களை மின்சார தேவைக்கு மட்டுமே ஈரான் பயன்படுத்துவதை இது உறுதி செய்வதாக இருந்தது. ஆனால், டிரம்ப் அதிபராகத் தேர்வான பிறகு 2018ம் ஆண்டில் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதன் பின்னரே ஈரான் அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
செறிவூட்டப்பட்ட யுரேனியம்: பொதுவாக மின்சார தேவைக்கு 3 - 5% வரையிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் போதும். ஆனால், இப்போது ஈரானிடம் 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கிறது. ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளையே தொடர்ந்து செய்து வருகிறது. அணுக் குண்டுகள் உற்பத்திக்குத் தேவையான 90% செறிவூட்டலை அடையவே ஈரான் முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
பதற்றம்: இஸ்ரேலுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே இப்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து அதற்காக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாகக் கடந்த மாத இறுதியில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் அங்குப் போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஈரான் இடையே போர் வெடித்தால் அது நிச்சயம் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications