சொல்லி அடித்த கில்லி! பிரதமர் நாற்காலியை வசமாக்கும் ”சபாஷ்” ஷெபாஸ் ஷெரீப்? கடந்து வந்த அரசியல் பாதை!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் சனிக்கிழமை ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யார் இந்த ஷெபாஸ் ஷெரீப் என்பது குறித்து பார்க்கலாம்
பாகிஸ்தான் நாட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் நாடகத்தில் கிளைமாக்ஸில், இம்ரான் கான் சனிக்கிழமையன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சி 172வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்?
மொத்தம் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில்,
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. ஷெபாஸ் ஷெரீப்புக்கு தான் பிரதமர் பதவி என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி மார்ச் 30 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படுத்தினார். திங்கட்கிழமையான நாளை பிற்பகல் 2 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றம் மீண்டும் கூடி பிரதமரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அரசியல் பின்னணி
தற்போதைக்கு ஷெபாஸ் ஷெரிப் தான் பாகிஸ்தானின் பிரதமர் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலை அவரது பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம். ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவராக உள்ளார். 1950ல் லாகூரில் ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த இவர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார். மேலும் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர்
ஆகஸ்ட் 2018ல் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் நாற்காலிக்கு உரிமை கோரினார். இருப்பினும், பூட்டோ தலைமையிலான பிபிபி கடைசி நேரத்தில் பிரதமர் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தது. இது இம்ரான் கான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி வகுத்தது. அவர் லாகூரில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஷெரீப் 1985 இல் லாகூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவரானார். அவர் 1988 இல் முதல் முறையாக பஞ்சாப் மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1990 இல் தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடு கடத்தப்பட்டவர்
மீண்டும் 1993 இல் மாகாண தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார். 1997ல் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக பதவியேற்றார். 1999-ல் அப்போதைய பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வே முஷாரப்பின் ராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஷேபாஸ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 2007ல் பாகிஸ்தானுக்குத் திரும்பிய நிலையில், அடுத்த ஆண்டில் அவர் மூன்றாவது முறையாக பஞ்சாப் மாகாணத்தின் முதல்வரானார்.

பிரதமர் கனவு
2017ல் தேசிய அரசியலில் நுழைந்தார். பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில் அவரது மூத்த சகோதரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து. பிப்ரவரி 2018 இல், அவர் PML-N இன் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், செப்டம்பர் 2020ல் NABஆல் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்துடன் ஷேபாஸ் நல்லுறவைப் பகிர்ந்து கொள்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு அவரது பிரதமர் கனவு நனவாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications