சிறுவர்களிடம் தகாத முறையில் நடந்ததாக இத்தாலிய தூதர் பிலிப்பைன்ஸில் கைது
துருக்மெனிஸ்தானுக்கான இத்தாலிய நாட்டு தூதர் டேனியல் போசியோ(46). அவர் விடுமுறையை கழிக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள லகுனா என்ற இடத்தில் இருக்கும் ரிசார்ட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவருடன் அவருக்கு தொடர்பில்லாத 9 முதல் 12 வயது வரை உள்ள 3 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போசியோ மீது சிறுவர்களை கடத்தியது, தவறாக நடந்து கொண்டது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
விசாரணையில் அவர் கூறுகையில், அந்த சிறுவர்கள் 3 பேரும் தெருவில் வாழ்ந்ததாகவும் தான் அவர்களை மணிலாவில் இருந்து அழைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவர் சிறுவர்களின் பெற்றோரிடம் அவர்களை அழைத்து வந்ததை தெரிவிக்கவில்லை.
விசாரணையில் சிறுவர்கள் கூறுகையில், போசியோ எங்களை முதலில் அவர் தங்யிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் எங்கள் ஆடைகளை அவிழ்த்து அவரே எங்களை குளிப்பாட்டிவிட்டார். பின்னர் எங்களுக்கு பணமும், உணவும் அளித்தார் என்றனர்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் போசியோவுக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.