செளதி அரேபியா இளவரசர் சவூது அல் பைஸல் மறைவுக்கு ஐ.யூ.எம்.எல் தலைவர் அகமது இரங்கல்
டெல்லி: செளதி அரேபியாவின் நீண்ட கால வெளியுறவு அமைச்சரும், இளவரசருமான சவூது அல் பைஸல் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் அறிக்கை:
இளவரசர் சவூது அல் பைஸல் மறைவு செளதி அரேபியாவிற்கு பெரிய இழப்பாகும். அவர் நான்கு செளதி அரசர்களின் கீழ் பணியாற்றி செளதியின் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்தியவர்.
40 ஆண்டுகள் பணியாற்றிய அவர் மத்திய கிழக்கை பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முக்கியமான பணியாற்றியவர்.
இந்தியா ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டது. எனக்கும் - அவருக்கும் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வந்தது. இந்தியா தொடர்பான பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.
புனித ஹஜ் மற்றும் நிதாகட் போன்ற பிரச்சனைகளில் அவர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். நிதாகட் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்ட போது, இந்தியாவினுடைய உணர்வுகளை மதித்து நடந்து செளதி அரசிடம் இந்தியர் நலன்களை பாதுகாத்தவர். அவரது இழப்பு செளதிக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்குப் பகுதி முழுவதுக்குமே பேரிழப்பாகும்.
இவ்வாறு இ.அஹமது தமது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.