கை நிறைய கஞ்சா... ஜாக்கி சானின் மகன் அதிரடி கைது!
பெய்ஜிங்: போதைப் பொருள் வைத்திருந்ததாக பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சீனப் போலீஸார், பெய்ஜிங் நகரில் கைது செய்தனர்.
32 வயதான ஜெய்சி சானும், தனது தந்தையைப் போலவே நடிகர் ஆவார். பாடகரும் ஆவார். இவரிடம் போதைப் பொருட்கள் இருந்ததாக கூறி சீனப் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெய்ஜிங்கில்தான் வசித்து வருகிறார் ஜெய்சி சான். அங்குள்ள அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டு மூன்றரை அவுன்ஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர். அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதையும் சோதனை மூலம் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
போதை விருந்து
தான் மட்டுமல்லாமல், தனது நண்பர்களுக்கும் போதைப் பொருள் விருந்து வைத்துள்ளார் ஜெய்சி சான். மேலும் தைவானைச் சேர்ந்த நடிகரும், தனது நண்பருமான 23 வயது கை கோவுக்கும் அவர் போதைப் பொருள் விருந்து வைத்ததாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.
தைவான் நடிகர் கை கோ
தற்போது கை கோவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தவிர சோங் என்ற ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிக்கி வரும் நடிகர்கள்
சமீப காலமாக சீனாவில் போலீஸார் போதைப் பொருளுக்கு எதிரன நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதில் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானைச் சேர்ந்த பல திரையுலகினர் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியில் ஜாக்கி
ஜாக்கிசான் இந்த கைது நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சீனக் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
சொல்லச் சொல்லக் கேட்காத ஜெய்சி
ஏற்கனவே தனது மகன், கை கோவுடன் பழகுவதை ஜாக்கி சான் விரும்பவில்லை. கை கோவுடன் கை கோர்க்காதே என்று பலமுறை அவர் அறிவுரை கூறியிருந்தாராம். ஆனால் ஜெய்சி சான் அதைக் கேட்காமல் தொடர்ந்து கை கோவுடன் பழகி வந்துல்ளார்.
அமெரிக்காவில் பிறந்து
ஜெய்சி சான் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார்.
எல்லாம் டப்பாப் படங்கள்
ஜெய்சி சான் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. அனைத்துமே தோல்விப் படங்கள்தான். இதனால் ஜாக்கி சானுக்குப் பெருத்த நஷ்டமே ஏற்பட்டது.
அஞ்சு பைசா கிடையாது
தனது மகனின் செயலால் அதிருப்தி அடைந்த ஜாக்கி சான் தனது சொத்துக்கள் அத்தனையையும் அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப் போவதாக கடந்த 2011ம் ஆண்டே அறிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.