இந்தியாவின் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசார் குடும்பமே சிதைந்து போனது.. புலம்பிய ஜெயஷ் பயங்கரவாதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலால் மசூத் அசாரின் குடும்பமே சிதைந்து போனதாகவும் இதனால் தங்கள் பயங்கரவாத அமைப்பு பெரிய இழப்பைச் சந்தித்ததாகவும் ஜெயஷ்-இ-முகமது ஒப்புக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தளபதி ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மே மாதம் இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இதில் பாகிஸ்தானில் இருக்கும் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜெயஷ்-இ-முகமது
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் மசூத் அசார் தொடர்பாகவும் ஜெயஷ்-இ-முகமது அமைப்பு முதல்முறையாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது ஆபரேஷன் சிந்தூரில் மசூத்தின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அப்போதே தகவல்கள் வெளியானது. இருப்பினும், ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தது. இதற்கிடையே முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூரில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் தனது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஜெயஷ்-இ-முகமது ஒப்புக்கொண்டு இருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரில் தங்கள் அமைப்புக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதாக அவர் சொல்வது தெளிவாகக் கேட்கிறது.
குடும்பமே சிதைந்தது
குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுப்கான் அல்லாஹ் என்ற ஜெயஷ் தலைமையகத்தின் மீது மே 7ம் தேதி இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பம் துண்டுத் துண்டாகப் போனதாகவும் அவரது குடும்பே சிதைந்து போனதாகவும் மசூத் இலியாஸ் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர், "எல்லாவற்றையும் இழந்த பிறகு, மே 7ம் தேதி மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹவல்பூரில் இந்தியப் படைகளால் சிதைந்துபோனது" என்கிறார்.
மேலும், பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவளிப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதையும் ஒப்புக்கொள்வது போல இலியாஸ் பேசியிருக்கிறார். இந்தியாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் தளபதிகளை அனுப்பியதாக மசூத் இலியாஸ் காஷ்மீரி குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக மே மாதம் இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து அழித்தது. பாகிஸ்தானின் 12வது பெரிய நகரமான பஹவல்பூர், லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் இருக்கிறது. அந்த இடத்தை இந்திய ராணுவம் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கியதில் அசாரின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
யார் இந்த அசார்
இந்த அசார் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாவார். ஐநா அமைப்பாலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அசார் இருக்கிறார். 2016 பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவர் மூளையாகச் செயல்பட்டவர். இவர் இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பதுங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications