கொரோனா தனிமை.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. நிலைமையை கட்டுப்படுத்த தனி அமைச்சகத்தையே உருவாக்கிய ஜப்பான்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்கொலை அதிகரித்துள்ள நிலையில், தற்கொலைகளைக் கட்டுப்படுத்த புதிதாக தனிமை அமைச்சகத்தை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி என வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவின் கோரப் பிடிக்கு இரையாகின.
கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்புகள் மட்டும் ஏற்படவில்லை. சீனா தவிர அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டது. இதனால் கோடிக் கணக்கான மக்கள் வேலையிழந்தனர். பல கோடி பேர் தனிமையில் தள்ளப்பட்டனர்.
ஜப்பான் கொரோனா பாதிப்பு
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான ஜப்பானும் கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. பொருளாதார ரீதியிலும் மிகவும் மோசமான பாதிப்புகள் இருந்ததால், பலர் வேலையிழந்தனர். மேலும், அனைவரும் வீட்டிலிருந்த வேலை செய்யும் சூழலும் உருவாகியுள்ளதால் ஜப்பான் நாட்டு மக்களிடையே தனிமையும் அதிகரித்தது.
அதிகரிக்கும் தற்கொலை
இதனால் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பான் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டு மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது அந்நாட்டில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளையும்விட அதிகம். தனிமை மற்றும் மனச்சோர்வு காரணமாக தற்கொலைகள் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜப்பான் அரசு இதற்கென தனியாக ஒரு துறையை உருவாக்கியுள்ளது.
தனி அமைச்சகம்
தற்கொலைகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தனிமைத் துறை அமைச்சராக டெட்சுஷி சகமோட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆராய்ந்து விரிவான ஒரு ஒரு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பொதுமக்களின் தனிமையைப் போக்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல ஜப்பான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை பிறப்புகளும் அபாயகரமான அளவுக்குக் குறைந்து வருகிறது. இதைத் கட்டுப்படுத்தும் பொறுப்பும் டெட்சுஷி சகமோட்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் தற்கொலையே அதிகம்
ஜப்பான் நாட்டில் ஆண்களை விடவும் பெண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் மட்டும் 880 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது குறித்து அந்நாட்டிலுள்ள உளவியல் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "ஜப்பான் நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிங்கிளாகவே உள்ளனர். வீட்டிலும் தனியாகவே உள்ளனர். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் வேலையிழக்கும்போது, வீட்டில் துணைக்குக் கூட ஆள் இல்லாததால் மனசோர்வு ஏற்படுகிறது, இதனாலேயே பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் " என்றார்.