100 அடி நீளத்துக்கு சாலையில் திடீர் ராட்சத பள்ளம்.. 2 நாளில் சரி செய்த ஜப்பான்! கற்குமா இந்தியா?
டோக்கியோ: ஜப்பானில் கடந்த வாரம் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் இரண்டே நாட்களில் சரி செய்யப்பட்டு அதனோடு சேர்ந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பபட்டுள்ளது. சாலை குழிகளையே அடைக்க முடியாத நமது நாடு கற்றுக்கொள்ள அதில் பாடமும் உள்ளது.
ஜப்பானின் புகுவோகா நகரத்தில்தான் இதை சாதித்து காட்டியுள்ளனர் அதிகாரிகள். அந்த நகரத்தின் முக்கிய சாலையில் 100 அடி தூரத்திற்கு திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இது ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் பாதி அளவுக்கு இருக்கும். இதனால் குடிநீர், மின்சார இணைப்புகளும் பாதிக்கப்பட்டன.

உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் ராப்பகலாக வேலை பார்த்தனர். சிமெண்ட் லாரிகள் வரிசை கட்டி வந்தன. பெரும் பள்ளத்தை வேகமாக சரி செய்ய ஆரம்பித்தனர். 2 நாட்களில் அந்த சாலை புத்தம் புதிதாக பளபளக்கிறது. 30 மடங்கு அதிக வலிமையோடு ரோட்டை சீரமைத்துள்ளதாக நகர மேயர் டொயிசீரோ டகாசிமா தெரிவித்துள்ளார். சாலையில் பள்ளம் ஏற்பட்டு மக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இப்போது அங்கு மின்வசதி, குடிநீர் வசதி என அனைத்தும் சீரடைந்துவிட்டன. பல வருட காலமாக குண்டும் குழியுமாக உள்ள சாலையையே நம்மால் சமாளிக்க முடியாத போது ஜப்பானின் இந்த வேகம் வியக்க வைக்கிறது. அணுகுண்டு தாக்குதலையே முறியடித்து வளர்ந்த நாட்டுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இப்படி ஏற்பட்ட ஒரு மாபெரும் பள்ளத்தை சரி செய்ய 10 மாதங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications