இது நாடு.. இது சேவை... ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் இயங்கும் ரயில்வே ஸ்டேஷன்!
டோக்கியோ: ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக காலையிலும், மாலையிலும் ரயில் ஒன்று இயங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஹொக்காய்டா மாவட்டத்தில் உள்ளது காம்கி மற்றும் சிராடாகி கிராமங்கள். இந்த இரண்டு கிராமங்களையும் இணைப்பதற்காக முன்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. ஆனால், போதிய பயணிகள் இதில் பயணம் செய்யவில்லை.
இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை இழுத்து மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இந்த ரயில் மூலமாகவே மாணவி ஒருவர் கல்வி கற்க வேறு ஊருக்கு சென்று வருவது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மாணவியின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது எனக் கருதிய ரயில்வே நிர்வாகம், அந்த ரயில்வே ஸ்டேஷனை மூடும் முடிவைக் கைவிட்டது.
தற்போது அந்த ஒரு மாணவிக்காக மட்டுமே அந்த ரயில்வே ஸ்டேசன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சரியாக காலையில் 7 மணியளவில் வரும் ரயிலில் ஏறி அம்மாணவி பள்ளிக்கு செல்வார். பின் மீண்டும் மாலையில் 5 மணியளவில் அதே ரயில் மூலம் அவர் தன் கிராமத்திற்கு திரும்பி விடுவார்.
வரும் மார்ச் மாதத்துடன், அம்மாணவியின் படிப்பு முடிவடைய இருக்கிறது. அதன்பின், அந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டில் பல இடங்களில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஆற்றைக் கடந்து, மலையைக் கடந்து கல்வியைத் தேடி மாணவர்கள் ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு மாணவிக்காக ஜப்பானில் ரயில்வே நிர்வாகம் ரயில் ஒன்றை இயக்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications