ஷார்ஜாவில் கை கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி தொடக்கம்!
ஷார்ஜாவில் கை கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் கைக்கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் 500 திர்ஹத்துக்கு மேல் பொருட்களை வாங்கும் மக்களுக்கு பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 43-வது மத்திய கிழக்கு கைக்கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சி சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சியை ஷார்ஜா துறைமுகம் மற்றும் சுங்கவரித்துறையின் தலைவர் ஷேக் காலித் பின் அப்துல்லா பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் கண்காட்சியில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரங்குகளை அவர் பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஹாங்காங், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 500&க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முதல் முறையாக அமீரகத்தைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர்கள் சிறப்பு அரங்கை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியில் 500 திர்ஹாத்துக்கு பொருட்கள் வாங்குபவர்கள் தினமும் 1 கிலோ கிராம் தங்க பார் மற்றும் வைர மோதிரங்களையும், இறுதி நாளில் ஆடம்பர காரை பரிசாகவும் பெறும் வாய்ப்புள்ளது. இந்த கண்காட்சியை தினமும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வியாழக்கிழமை இரவு 11 மணி வரையிலும் பார்வையிடலாம்.
வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். பெண்கள் மட்டும் புதன்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சிக்கு வருபவர்கள் இலவசமாக கார் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறும்.
தொடக்க விழாவில் சார்ஜா வர்த்தகம் மற்றும் தொழில்சபையின் தலைவர் அப்துல்லா பின் சுல்தான் அல் ஒவைஸ், சார்ஜா எக்ஸ்போ சென்டரின் தலைமை செயல் அலுவலர் சைப் முகம்மது அல் மித்பா, ஷேக்குகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.