பிரிந்து போன காதலி... வேதனையில் காதலி ஓட்டி வந்த ரயில் முன் பாய்ந்து இறந்த காதலன்
எடின்பர்க்: காதலி பிரிந்த தோல்வியில் மனமுடைந்த காதலன், காதலி ஓட்டி வந்த ரயிலின் முன்பு பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்காட்லாந்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஸ்காட்லாந்தின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்குரியவர் மேக்டொனால்ட். இவர் தனது 19 வது வயதில் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்து பின்னர் 2009ம் ஆண்டு டிரைவராக பணியில் அமர்ந்தார்.
மேக்டொனால்ட்டும், கேரி வெல்ஸ் என்பவரும் கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர்களது காதல் முறிந்தது.
இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார் வெல்ஸ். காதலி பிரிந்த துக்கம் தாளாமல் இருந்தவர் காதலி கைகளாலேயே மரணத்தைத் தழுவுவது என முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று காதலி ஓட்டிவந்த ரயிலின் முன்பு போய் நின்று கொண்டார். இதை எதிர்பாராத காதலி அதிர்ச்சி அடைந்து விட்டார். ஆனால் ரயிலை நிறுத்த முடியவில்லை. ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் வெல்ஸ்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெல்ஸ்சின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெல்ஸ்சின் இந்த தற்கொலை முடிவால் அவரது உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.