கனடா அரசை திணறடிக்கும் டிரக் ஓட்டுநர்கள்.. குறிவைக்கப்படும் ஜஸ்டின் ட்ரூடோ? இனி அவ்வளவு தானா
ஒட்டாவா: கனடாவில் வேக்சின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அந்நாட்டில் பதற்றமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உலகின் பல நாடுகளும் கொரோனா பரவலை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா உயிரிழப்புகளை வேக்சின் பெரியளவில் குறைப்பதால், வேக்சின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் வேக்சின் பணிகளும் கூட தொடங்கப்பட்டுள்ளது.

வேக்சின்
இருப்பினும், இன்னும் கூட சிலருக்கு வேக்சின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் குறிப்பிட்ட சதிவிகம் மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற வேக்சின் போட்டுக் கொள்ளாத மக்களுக்கு மட்டும் சில நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இது அவர்களுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு தங்கள் உரிமையில் தலையிடுவதாக அவர்கள் சாடி வருகின்றனர்.

வேக்சின் கட்டாயம்
இப்படி தான் கனடா அரசு, வேக்சின் போட்டுக் கொள்ள தயங்கும் டிரக் டிரைவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. பொதுவாகக் கனடா -அமெரிக்கா எல்லையில் போக்குவரத்து சகஜமாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையே சரக்கு வாகன சேவை தொடர்ந்து நடைபெற்று வரும். இந்தச் சூழலில் தான் இரு நாட்டு எல்லைகளைக் கடக்க வேக்சின் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இது கனடா நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து

தொடர் போராட்டம்
கடந்த ஜன. 29ஆம் தேதி தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டு டிரக் ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டாவா நகரின் முக்கிய வீதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கேயே கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டிரக் ஓட்டுநர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், அதிக ஒலி கொண்ட ஹரன்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கடும் இன்னல் ஏற்பட்டுள்ளது.

அவசர நிலை
போராட்டம் கையை மீறிப் போவதாகவும் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதைச் சமாளிக்கும் அளவுக்கு போலீசார் தங்களிடம் இல்லை என ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் தெரிவித்துள்ளார். மேலும், கனடா தலைநகர் ஒட்டாவாவில் இந்த போராட்டம் காரணமாக அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், விரைவில் நிலைமை கையை மீறிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடா அரசு
இந்தச் சூழலில் தாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமரா லிச் அறிவித்துள்ளார். கனடா அரசு மக்களின் உரிமைகளை ஒடுக்க நினைக்கிறது என்றும் அரசு வேக்சின் தொடர்பான கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற்றால் போராட்டம் வாபஸ் பெறப்படும் எனத் தெரிவித்தார். அதேநேரம் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேஸ், பெட்ரோல் போன்ற பொருட்களைப் போராட்ட களத்திற்கு எடுத்துச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மவுனம் சாதிக்கும் பிரதமர்
இந்த தொடர் போராட்டம் கனடா அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டதால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து. ஆனால், இப்போது இந்த போராட்டம் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக முதலில் சில கடுமையான கருத்துகளை ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இருப்பினும், அதன் பின்னர் அவர் தொடர்ந்து மவுனம் சாதித்தே வருகிறார்.

என்ன காரணம்
இதுவும் போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் அரசியல் வல்லுநர்கள், "இந்த விவகாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்பத்தில் மிக மோசமாக நடந்துகொண்டார். தீவிர வலதுசாரிகள் என போராட்டக்காரர்களை அவர் சித்தரிக்க முயன்றது தேவையில்லாத பிரச்சினையைக் கிளப்பியது. இது எரியும் தீயில் எரிபொருளைச் சேர்க்கும் வகையில் அமைந்துவிட்டது. இதை ஜஸ்டின் ட்ரூடோ முறையாக கையால் வேண்டும். இல்லையென்றால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும்" என்றார்.

சிக்கலை அதிகப்படுத்தும்
கடந்த இரு தேர்தல்களிலும் ஜஸ்டின் ட்ரூடோவால் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெற முடியவில்லை. குறிப்பாக, கடந்த தேர்தலில் சமயத்தில் ட்ரூடோவின் லிபரல் கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்பினர். இந்தச் சூழலில் இந்த போராட்டமும் அவரது இமேஜை கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, எவ்வளவு சீக்கிரம் இந்த போராட்டத்தை அவர் முடிவுக்குக் கொண்டு வருகிறோரோ அவ்வளவு நல்லது. இல்லையென்றால் அவரை ஓரம்கட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிடுவார்கள்.

ராணுவ நடவடிக்கை
அதேநேரம் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்த ஜஸ்டின் ட்ரூடோ நினைத்தால், அவர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் போராட்டக்காரர்கள் இதுவரை சட்ட ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் செய்யவில்லை. இந்தச் சூழலில் ஜஸ்டின் ட்ரூடோ ராணுவத்தை பயன்படுத்த நினைத்தால், அதுவும் அவருக்குப் பின்னடைவையே தரும்.












Click it and Unblock the Notifications