காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் பதற்றம்.. கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து
காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில் கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அம்ரித்பால் சிங்கிற்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் உள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதலே காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் அதிகரிக்கத் தொடங்கின.
குறிப்பாக அம்ரித் பால் சிங் உதவியாளரைப் பஞ்சாப் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்காகப் பயங்கர ஆயுதங்களுடன் அம்ரித் பால் சிங் போலீஸ் நிலையத்தைத் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அம்ரித் பால் சிங்
இதனால் அப்போது நிலைமையை சமாளிக்க அம்ரித் பால் சிங் உதவியாளர் விடுவிக்கப்பட்டார். அப்போது முதலே அம்ரித் பால் சிங்கை கண்காணித்த போலீசார், கடந்த சனிக்கிழமை அவரை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள் பலரை கைது செய்த போதிலும் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை. கடைசி கட்டத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இந்தியா கடும் கண்டனம்
அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளை கண்டித்து வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

சான் பிரான்சிஸ்கோவில் தாக்குதல்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தையும் நேற்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கினர். கதவு, ஜன்னல் கண்னாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். அதேபோல், ஆஸ்திரேலியாவிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடைபெற்றது. வெளிநாடுகளில் அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கையை கைவிட கோரி காலிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடைசி நேரத்தில் ரத்து
இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் காரணாமாக கனடாவில் இந்திய தூதர் சஞ்செய் குமார் வெர்மா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தாஜ் பார்க் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவரது காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் காரணமாக இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர் சமீர் கவுசல் என்பவரையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications