லெபனானில் பொதுமக்களின் வீடுகளில் ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வைக்கிறது.. இஸ்ரேல் பிரதமர் பகீர்
ஜெருசலேம்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500 -ஐ நெருங்கியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வீடியோ வாயிலாக லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல ஹிஸ்புல்லா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு பயங்கர தாக்குதல் நடத்தி பலரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றது. இதனால், கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து கட்டுவோம் எனக் கூறி போர் தொடுத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், லெபானானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. இதில் 39 பேர் பலியாகினர்.
இதனால் கோபம் அடைந்த ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். இதையடுத்து இஸ்ரேலும் தாக்குதலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படுத்தியது. லெபனானில் 300 க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இந்த ஏவுகணை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்து இருக்கிறார். பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது:- லெபனான் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுக்கவில்லை. ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராகத்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பல காலமாகவே அப்பாவி மக்களை மனித கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.
நீங்கள் வசிக்கும் இடத்தில் ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வைத்து விடுகிறது. இந்த ராக்கெட்டுகள் நேரடியாக இஸ்ரேல் நகரங்களை தாக்குகிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு எதிராக எங்கள் குடிமக்களை பாதுகாக்க நாங்கள் திருப்பி அடிக்கிறோம். அந்த ஆயுதங்களை நாங்கள் அழிக்க வேண்டியுள்ளது. உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹிஸ்புல்லாவின் இந்த செயலை அனுமதிக்காதீர்கள்.. தீமைகளில் இருந்து உடனே விலகி விடுங்கள்.. எங்கள் நடவடிக்கை முடிந்தததும் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்கு திரும்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications