லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சம் பேர் அஞ்சலி… நாளை இறுதிச்சடங்கு – மோடி பங்கேற்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து மக்கள் கூட்டம் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி கண்ணீர் மல்க படையெடுத்தப்படியே உள்ளனர். நாளை நடைபெற உள்ள அவரது இறுதிச்சடங்கில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சிங்கப்பூரின் சிற்பி என்று அழைக்கப்படும் லீ குவான் யூ, உடல்நலிவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 23 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு சிங்கப்பூர் தாண்டி உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். ஒரு குட்டி நாட்டின் தலைவருக்கு உலகம் உண்மையான மரியாதையை செலுத்தியுள்ளது.
அவரின் மறைவையொட்டி சிங்கப்பூரின் நகரங்களில் எங்கு பார்த்தாலும் படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் லீயின் புகழ் நினைவூட்டப்படுகின்றன. அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகின்றது.
அவர் உயிரிழந்த நாள் முதல் அவரின் உடலுக்கு பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலியை, கனத்த இதயத்தோடு கண்ணீர் வழிய செலுத்திவருகின்றனர். சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.5 மில்லியன் (55 லட்சம்) ஆகும். இதில் 3.34 லட்சம் மக்களே சிங்கப்பூர் குடிமக்கள். மற்றவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
3 லட்சம் மக்கள்
இதுவரை 3,30,000 சிங்கப்பூர் மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் வந்து தங்களின் அன்பிற்கு இனிய தலைவருக்கு அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர். இருப்பினும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தொடர்ந்து மக்கள் கூட்டம் படையெடுத்த வண்ணமாக இருக்கிறது. இதனால், மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு நேற்று மாலை நாடாளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில்
மீண்டும் இன்று காலை நாடாளுமன்ற வளாகம் திறக்கப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக லீ குவான் யூ உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மோடி பங்கேற்பு
இந்நிலையில், லீ குவான் யூவின் இறுதிச் சடங்கு நாளை (29ஆம் தேதி) ஞாயிறன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டோ வேண்டாம் சல்யூட் போடுங்க
இதனிடையே லீயின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலை யாரும் செல்போன் மூலம் போட்டோ எடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக சல்யூட் பண்ணுங்க என்று சொல்லும் வாசகம் அடங்கிய படம் ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த படம் பதிவிடப்பட்ட 11 மணிநேரத்தில் 10000 பேரால் பகிரப்பட்டுள்ளது. 10,000 லைக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் துக்கம்
இதனிடையே லீ குவான் யூவின் இறுதிச் சடங்கு நடைபெறும் தினமான நாளை (29ஆம் தேதி) இந்தியாவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications