லிபியாவை துரத்தும் துயரம்.. கடாபி முதல் ஐஎஸ் பயங்கரவாதிகள் வரை! மொத்தமாக சீர்குலைய என்ன காரணம்
திரிபோலி: வடக்கு ஆப்பிரிக்காவின் லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது. இப்போது மட்டுமின்றி லிபியாவை கடந்த காலங்களிலும் துயரம் துரத்திக் கொண்டே இருந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
லிபியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான டெர்னா நகரம், இந்த வெள்ள பாதிப்பால் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

இந்த பாதிப்பில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் காணாமல் போகினர். மாயமானோரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
லிபியா வெள்ளம்: வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த டெர்னா நகரில் பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகப் பல காரணங்கள் இருக்கிறது. அங்கே ஏற்பட்ட உள்நாட்டுப் போரும் சுமார் 10 ஆண்டுகளாக அங்கே இருக்கும் அரசியல் குழப்பமும் இணைந்து அங்கே ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. கடந்த 2014 முதல் இரண்டு அங்கே அரசியல் குழப்பம் இருந்து வருகிறது. லிபியா நாடு முழுக்க ஒரே அரசுக்கு அதிகாரம் இல்லை. அங்கே அரசு நிர்வாகம் இரண்டாகவே பிரிந்து இருக்கிறது.
அதிபர் தேர்தலை நடத்தத் தவறியதால், இதுபோன்ற பேரழிவு ஏற்படும் போது ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. பேரிடரைச் சமாளித்து இயல்பு நிலைக்குத் திரும்புவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இப்படி இரண்டு துண்டாக இருப்பதால் வெள்ளத்திற்கு அவர்களால் தயாராக முடிவதில்லை. மேலும், உடனடியாக உலக நாடுகள் அனுப்பும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது.
டெர்னா: லிபியாவில் கடலோர நகரமான டெர்னாவில் தான் பாதிப்பு மோசமாக இருக்கிறது. அங்கே கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உருவான டேனியல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் நகரமே சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், பல நாடுகளும் லிபியாவுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அங்கே அரசு இரண்டாகப் பிளந்துள்ளதால்.. எங்கே உதவிகளை அனுப்புவது என்பதில் குழப்பம் நிலவுகிறது.
மொராக்கோவில் சமீபத்தில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கே 3000 பேர் உயிரிழந்தனர். இப்போது இந்த வெள்ளம் லிபியாவை புரட்டிப் போட்டுள்ளது. ஆனால், மொராக்கோவில் இருந்த நிலைமையும் அங்கே அடுத்தடுத்து நடந்த சம்பவங்களும் முற்றிலுமாக வேறாக இருந்தது. அங்கே பூகம்பம் ஏற்பட்டவுடன் அந்நாட்டு அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தன. மக்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுத்த மொராக்கோ, பாதுகாப்பு உதவிகளையும் முறையாக விநியோகம் செய்தன.
பாதிப்பு ரொம்ப மோசம்: ஆனால், லிபியாவில் அந்த நிலை இல்லை. இங்கே பாதிப்பு மோசமாக இருந்தாலும், மீட்புப் பணிகளைக் கண்காணிப்பது யார் எனத் தெளிவாகத் தெரியவில்லை. உலக நாடுகள் லிபியாவுக்கு உதவ முன்வந்த போதிலும், எங்கே அனுப்புவது யாருக்கு அனுப்புவது என்பதில் அங்கே தொடர்ந்து குழப்பமே நிலவி வருகிறது.
கடாபியின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் தான் லிபியா இருந்தது. இருப்பினும், கடந்த 2011 நேட்டோ படைகள் அவரது ஆட்சியைக் கழித்தது. அதன் பிறகு 2014 முதலே அங்கே குழப்பமான சூழலே நிலவி வருகிறது. கடந்த 2015இல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு லிபியாவுக்குள் நுழைந்த போதும் இந்த நகரைத் தான் முதலில் குறிவைத்தனர்.
இதனால் நகரின் உட்கட்டமைப்பு ஏற்கனவே மிக மோசமாகவே இருந்துள்ளது. இதன் காரணமாகவே தீவிர மழை பெய்தவுடன் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அணை உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் ஒட்டுமொத்த நகரமும் நாசமடைந்துள்ளது. உட்கட்டமைப்பு மோசமாக இருந்ததால் இதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்படும் என முன்பே தெரியும் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications