விடைபெற்றது தென்னாப்பிரிக்காவின் உதய சூரியன்.. 'கருப்பர் இன நட்சத்திரம் மண்டேலா'
ஜோகன்னஸ்பெர்க்: இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன்னே விடுதலைப் போராட்டம் நடத்தி நாம் வாழும் காலத்தே மறைந்தவர் மாபெரும் போராளித் தலைவர் நெல்சன் மண்டேலா..
வெள்ளை இனவெறி அரசாங்கத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக அறவழியில் போராடியவர்.. தேச விடுதலைக்கு போராடிய "பெருங்குற்றத்துக்காக" 27 ஆண்டுகாலம் இருட்டு தனிமை சிறையில் வாழ்க்கையை ஒப்படைத்தவர்.
அமைதியின் சின்னமாக உலகம் அவருக்கு நோபல் பரிசு வழங்கி கொண்டாடியது. இன்று 95ஆம் வயதில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டது அந்த கருப்பர் இன நட்சத்திரம்!!

பிறப்பு
நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் அருகே குலுகிராமத்தில் பிறந்தவர்.

சட்ட கல்வி
1941 ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் சட்டக்கல்வி படித்தார் மண்டேலா. பின்னர் ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியில் பணியாற்றினார்.

தேசிய காங்கிரஸில்..
பின்னர் 1943ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மண்டேலா. வெள்ளை இனவெறி அரசுக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

தேச துரோக குற்றச்சாட்டு
இந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டு தேசத் துரோகக் குற்றசாட்டு மண்டேலாவுக்கு எதிராகப் பதியப்பட்டது, இருப்பினும் 4 ஆண்டுகால விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன

ஐந்தாண்டு சிறைவாசம்
பின்னர் 1962ஆம் ஆண்டு நாட்டில் கலவரத்தைத் தூண்டியது, பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை
இதன் பின்னர் 1964ஆம் ஆண்டு இனவெறி அரசுக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதால் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தனிமை சிறையிலேயே வாடினார் மண்டேலா. உலகில் எந்த ஒரு தலைவரும் இப்படி தம் இன விடுதலைக்காக ஒரு தண்டனையை அனுபவித்தது இல்லை.

மன்னிப்புகேட்க மறுப்பு
சிறை வாசத்தில் மன்னிப்பு கேட்டால் விடுதலை என்று சொன்னபோதும்கூட அதை நிராகரித்தவர் மண்டேலா. பின்னர் மெல்ல மெல்ல மண்டேலாவின் போராட்டம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. உலகமே தென்னாப்பிரிக்காவின் விடிவெள்ளி மண்டேலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தது.

27 ஆண்டுக்குப் பின்னர் விடுதலை
27 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் 1990ஆம் ஆண்டு மண்டேலா விடுதலையானார்.

நோபல் பரிசு
தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்கு அமைதி வழியில் போராடி சிறையேகிய தியாக தீபம் மண்டேலாவுக்கு உலகம் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியது.

முதல் கறுப்பின அதிபராக
பின்னர் 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவி விலகல்
வயது முதிர்வால் 1999ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து மண்டேலா விலகினார். ஆனால் அந்த நாட்டு மக்களின் போற்றுதலுக்குரிய பெருமகனாகவே வாழ்ந்தார்.

பொதுவாழ்க்கை விலகல்
முதுமையால் 2004ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக மண்டேலா அறிவித்தார்.

2013-ல் காலமனார்
பின்னர் தொடர்ச்சியான உடல்நலக்குறைவால் நெல்சன் மண்டேலா தமது 95ஆம் வயதில் உலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். தென்னாப்பிரிக்காவின் உதயசூரியன் இப்போது அஸ்தமனமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications