அமெரிக்க தீவிரவாத வழக்கில் அபு ஹம்சா குற்றவாளி - 100 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்
நியூயார்க்: அமெரிக்கச் சிறையில் உள்ள அபு ஹம்சா என்ற கைதி, பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள், சதித் திட்டம் உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
அபு ஹம்சா (56), இங்கிலாந்து நாட்டில் முஸ்லிம் மத போதகராக இருந்தவர். அவர் மீது மத துவேஷத்தைத் தூண்டி, பல தீவிரவாத தாக்குதல்களுக்கு துணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர் மத குருவாவதற்கு முன்னர், நிர்வாண நடன விடுதியின் முதலாளியாக இருந்ததசாகவும், மசூதியின் குரு என்ற போர்வையில் தீவிரவாத பயிற்சிக்கு ஆட்களை சப்ளை செய்யும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததாகவும் கூறி இங்கிலாந்து அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
மேலும், அபு அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்ததாகவும், அமெரிக்காவுக்கு தீவிரவாதிகளை அனுப்பி வைத்து அங்கே முகாம் தொடங்கவும் ஏற்பாடு செய்ததாகவும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயிற்சி முகாம்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
அபு ஹம்சாவை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியது அமெரிக்கா. சுமார் 10 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அபு மீது அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
தற்போது அமெரிக்காவின் சூப்பர்மேக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபு மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என்பது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக அபுவுக்கு 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். இதனால், சாகும் வரை இவர் கைதியாகவே இருக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏமன் நாட்டில் 4 வெளிநாட்டினரை கடத்திக் கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அபுவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications