மலை உச்சியில் காதல்.. தடுமாறி 650 அடி பள்ளத்தில் விழுந்த காதலி.. ஆனாலும் காதல் காப்பாத்திடுச்சு பாஸ்
ஆஸ்திரிய நாட்டில் மலை உச்சிக்கு சென்று காதலை சொல்ல நினைத்த ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியன்னா: ஆஸ்திரியாவில் மலை உச்சிக்கு சென்று காதல் வாழ்வைத் தொடங்க நினைத்த தம்பதி எதிர்பாராத விதமான விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த உலகமே காதலாலும் அன்பாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே வரக்கூடிய இந்த காதல் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய உறுதியை அவர்களுக்கு தந்து விடுகிறது. காதல் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் எந்த உச்சிக்கும் செல்ல தயாராகி விடுகிறார்கள்.
காதலை முதன்முதலாக தங்கள் இணையிடம் சொல்லும் தருணம் வாழ்வில் மறக்க இயலாதது. எனவே அதனை வித்தியாசமாகச் செய்யவே பெரும்பாலான காதலர்கள் விரும்புகின்றனர்.
மலையேற்றம்
அதுபோலத்தான் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இளம் ஜோடி ஒன்று மலை உச்சிக்கு சென்று தங்களது காதல் வாழ்வை தொடங்க நினைத்து இருக்கிறது. இதற்காக அவர்கள் கருந்திய பகுதியில் உள்ள பால்கேட் எனும் மலைக்கு ஒருநாள் மலையேற்றம் செய்து அதன் உச்சிக்கு சென்றனர்.
சம்மதம்
27 வயதான அந்த ஆண் தனது காதலியான 32 வயது பெண்ணிடம் தனது காதலை சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அந்த இளம் நாயகனின் காதலை உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டார். அப்போதுதான் எதிர்பாராத விதமாக அவர்களது காதல் புரொபோசலில் ஒரு பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டது.
விபத்து
எதிர்பாராத சமயத்தில் மலை உச்சியில் இருந்த சிறு பாறை சரிந்தது. இதனால் நிலை தடுமாறினார் அந்தப் பெண். காதலியின் கையை பிடித்து காப்பாற்ற முயன்றார் காதலர். ஆனால் அவரால் வெகுநேரம் காதலியின் கையை பிடித்து இழுக்க முடியவில்லை. இதனால் 650 அடி பள்ளத்தில் அப்பெண் விழுந்தார். காதலரும் நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் விழுந்தார்.
உயிர் தப்பினர்
அவர்கள் இருவரும் விழுந்தது பனி மலை என்பதால் பனிகளுக்கு நடுவே சிக்கிய அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த ஆணுக்கும் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காதலன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டர்களை கொண்டு இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயங்களுடன் இருவரும் உயிர் தப்பினர்.
நிச்சயம் இந்த ஜோடி தங்களது காதல் புரொபோசலை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார்கள்.