பயணிகள் கதறல்: மிக அமைதியாய் இருந்தபடி மலையில் மோதிய துணை பைலட்
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் மலையில் மோதும் முன்பு பயணிகள் கதறியுள்ளனர். ஆனால் துணை விமானி லுபிட்ஸோ மிக அமைதியாக இருந்து விமானத்தை மோத வைத்துள்ளார்.
ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். இதில் விமானத்தில் இருந்த லுபிட்ஸ் உள்பட 150 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இது குறித்து பிரான்சின் மார்சைல் நகர முதன்மை சட்ட பிரதிநிதி பிரைஸ் ராபின் கூறுகையில்,
விமானத்தை அழிக்க வேண்டும் என்பது தான் லுபிட்ஸின் நோக்கமாக இருந்துள்ளது. விமானம் மலையில் மோதிய வேகத்தில் அனைவரும் பலியாகியுள்ளனர். கடைசி நிமிடம் வரை நடந்தது என்ன என்பது பயணிகளுக்கு தெரியவில்லை. விமானம் மலையில் மோதும் சில நொடிகளுக்கு முன்பு தான் அவர்கள் நிலைமையை அறிந்து கதறியுள்ள சப்தம் கருப்பு பெட்டியின் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியிருந்தது.
லுப்டிஸோ மிக அமைதியாக இருந்தபடியே விமானத்தை மோத வைத்துள்ளார். கடைசி வரை அவர் எந்தவித சப்தமும் எழுப்பவில்லை. கழிவறைக்கு சென்ற கேப்டனை விமானி அறைக்கு வெளியேவிட்டு கதவை பூட்டியுள்ளார் லுபிட்ஸ். கேப்டன் கதவை தட்டியும், தள்ளியும் லுபிட்ஸ் கண்டுகொள்ளவில்லை. இன்டர்காம் மூலம் கேப்டன் தொடர்பு கொண்டபோதும் லுபிட்ஸ் பதில் அளிக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications