நியூயார்க்கில் கத்திமுனையில் என்னை சீரழித்தார்கள்: மடோனா அதிர்ச்சித் தகவல்
நியூயார்க்: நியூயார்க் வந்த புதிதில் கத்தி முனையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கட்டுரை ஒன்றில் பிரபலப் பாப் பாடகியான மடோனா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி 55 வயது மடோனா. இவர் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் தன்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், தான் நியூயார்க்கில் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாக பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது....
கனவு....
முதன் முறையாக நியூயார்க்குக்கு வந்தபோது 35 அமெரிக்க டாலர் பணத்துடன்தான் வந்தேன். அதை வைத்து மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது.
கத்தி முனையில் பலாத்காரம்....
நியூயார்க் நகருக்கு வந்து தங்கியிருந்தபோது முதல் வருடத்தில் கத்தி முனையில் நான் பலாத்காரம் செய்யப்பட்டேன். என் முதுகில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இழுத்து சென்று பலாத்காகரம் செய்தனர்.
கொள்ளைச் சம்பவம்....
அதன்பின்னர் எனது வீட்டில் 3 முறை கொள்ளை சம்பவம் நடந்தது. என்னிடம் இருந்த ரேடியோவைகூட கொள்ளையடித்து சென்றனர். அது ஏன் நடந்தது என எனக்கு தெரியவில்லை.
நான் துணிச்சல்காரி...
நான் துணிச்சல் மிக்கவள். அது எனது உடலில் பாரம்பரியமாகவே உள்ளது என நினைக்கிறேன். எனவே, வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராடினேன்.
புறாக்களைப் பார்த்து....
எனது அறையில் படுக்கையில் படுத்தபடி விரக்தியுடன் சுவரை பார்த்தபடி இருப்பேன். ஜன்னல் வழியாக பார்க்கும்போது புறாக்கள் தங்கள் கவலைகளை மறந்து பறந்து திரியும்.
தொடரும் போராட்டம்....
அவற்றை பார்த்த பின்னர் எனக்குள் புத்துணர்வு ஏற்பட்டு நானும் என் கவலைகளை மறந்து மகிழ்ச்சியான நிலைக்கு மாறுவேன். எனது வாழ்க்கை போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது' என அதில் மடோனா கூறியுள்ளார்.