அணு ஆயுத பஞ்சாயத்து.. ஈரான் விபத்துக்கு அமெரிக்கா காரணமா? விஷயம் இதுதான்
தெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கையி8ல், இன்று மாலை ஈரானின் முக்கிய துறைமுகம் பகுதி ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்திற்கும், அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு ஏதேனும் இருக்கிறதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் சுமார் 406 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 10 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பற்றிய அச்சம் அதிகரித்திருக்கிறது நீடித்து வருகிறது.

பந்தர் அபாஸ் எனும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இது பற்றி ஈரான் சுங்கத்துறை கூறுகையில், "எரிபொருட்களை தவறான இடத்தில் சேமித்ததே இந்த விபத்துக்கு காரணம். பந்தர் அபாஸ் சாஹிட் ராஜயி துறைமுகத்தின் சினா கொண்டெய்னர் கம்பவுண்டில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 406 ஆக அதிகரித்திருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹோர்மோசுகன் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மை இயக்குனர் கூறுகையில், "ஏற்கெனவே நாங்கள் இது தொடர்பாக எச்சரித்திருந்தோம். ஆனால் எச்சரிக்கையை சரியாக பின்பற்றவில்லை. எனவேதான் இந்த விபத்து நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளார். வெடி விபத்து நடந்த இடம், எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதிக்கு பக்கத்தில் இருப்பதால் எண்ணெய் கிணறு ஏதேனும் சேதமடைந்திருக்குமோ என்று சந்தேகம் எழுந்திருந்தது.
ஆனால், அப்படியான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து வெறுமென விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்று பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே 2015ம் ஆண்டு முக்கிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதாவது ஈரான் தனது அணு சக்தி வளத்தை அதிகரிக்க முயற்சித்தது. ஆனால் இது அணு ஆயுதத்தை நோக்கி போகுமோ என்கிற அச்சம் எழுந்தது. இதனையடுத்து, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை 3.67% என்கிற அளவில் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
3-5% வரை யுரேனியத்தை செறிவூட்டினால் அதை வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் இந்த அளவு 90%ஐ எட்டினால் அணு ஆயுதம் செய்யலாம். எனவேதான் ஈரானுக்கு கட்டுப்பாடு. இந்த கட்டுப்பாட்டை ஈரான் பின்பற்றினால் அந்நாட்டிலிருந்து விற்பனை செய்யப்படும் எண்ணெய்யை மேற்கு நாடுகள் வாங்கிக்கொள்ளும். ஒப்பந்தம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுக்கொண்டிருந்தது. ஆனால் டிரம்ப் 2018ல் அதிபராக இருந்தபோது, இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
எனவே, ஈரானும் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்தது. இதை காரணமாக வைத்து ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா போட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்க முடியாமல் போனது. இந்த பிரச்சனையை சரி செய்ய டிரம்ப் முன்வந்திருக்கிறார்.
அதன்படி யுரேனியம் செறிவூட்டலை ஈரான் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பதிலுக்கு தங்கள் மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த பின்னணியில்தான் ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து நடந்திருக்கிறது. எனவேதான் இது விபத்தா? அல்லது அமெரிக்காவின் சதி செயலா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications