பாகிஸ்தானின் எதிர்காலத்தை மாற்ற ‘அரசியல்வாதி’யாக விரும்பும் மலாலா...
லண்டன்: எதிர்காலத்தில் தான் ஒரு அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு நன்மை செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் மலாலா.
பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசூப்சாய், பெண்கல்விக்காக தொடர்ந்து போராடி வருபவர். இதனால், தாலிபன்களின் கோபத்திற்கு ஆளாகி, தாக்குதலுக்கும் ஆளானார். தலையில் குண்டடி பட்டு உயிருக்கு போராடிய மலாலா, லண்டன் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயர்சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.
தற்போது லண்டனில் தங்கியிருக்கும் மலாலா, தாலிபன்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வியை ஊக்குவிக்க வேண்டுமென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் மலாலா, அதில் தான் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக மாற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பேட்டியில் மலாலா தெரிவித்ததாவது....

கட்டாயக் கல்வி....
வருங்காலத்தில் நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பேன். எனது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க விரும்புகிறேன். நாட்டில் கல்வியை கட்டாயமாக்க விரும்புகிறேன்.

மறுமலர்ச்சி....
பாகிஸ்தானில் மக்கள் சுதந்திரமாக வாழ்வார்கள். அவர்களுக்கான உரிமையை பெறுவார்கள். அங்கே அமைதி நிலவும். ஒவ்வொரு சிறுமி-சிறுவர்களும் பள்ளிக்கு செல்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன்.

பிரிட்டன் கலாச்சாரம்....
இங்கு பிரிட்டனின் கலாச்சாரத்தை கண்டு அதிர்ந்து போனோம். இங்கு மக்கள் இவ்வளவு சுதந்திரமாக இருப்பார்கள் என்று நாங்கள் (குறிப்பாய் எனது அம்மா) ஒருபோதும் நினைக்கவில்லை.

தன்னம்பிக்கை பெண்கள்...
பெண்கள் எந்த சந்தைக்கும் சென்று வரலாம். அவர்கள் ஆண்கள், தம்பிகள், தந்தையர் துணையில்லாமல் வெளியே எங்கும் சென்று வர முடிகிறது.

பஸ்தூன் கலாச்சாரம்....
நான் மேற்கத்தியராக மாற விரும்பவில்லை. நான் எனது நாட்டின் கலாச்சாரத்தை, பஸ்தூன் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பாகிஸ்தானுக்கு திரும்பவே விரும்புகிறேன்.

பேச்சுவார்த்தை...
பாகிஸ்தானின் அமைதியை கொண்டுவர தலிபான்களுடனான பேச்சுவார்த்தை மிக அவசியம். பிரச்சினைகள் மற்றும் சண்டைக்கு முடிவு கட்ட பேச்சுவார்த்தையே சிறந்த வழி.

அமெரிக்காவின் உதவி....
எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அமெரிக்கா கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

விவாதம்....
தலிபான்கள் அவர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அவர்கள் விரும்புவது என்னவோ அதை பேச்சுவார்த்தையின் மூலமே செய்யவேண்டும்.

இஸ்லாத்திற்கு எதிரானது....
மக்களை கொல்வது, துன்புறுத்துவது, அடிப்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அவர்கள் இஸ்லாத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்' என இவ்வாறு மலாலா தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு....
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானோர்களின் பட்டியலில் மலாலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications