செவ்வாய், வியாழனுக்கு இடையில் சுற்றும் எரிகல்லுக்கு ‘மலாலா’ பெயர்...நாசா விஞ்ஞானி சூட்டினார்!
கலிபோர்னியா: பெண் கல்விக்காகப் போராடி, தாலிபன்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் பிழைத்த, நோபல் பரிசு பெற்றவரான பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் எரிகல் ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியான மலாலா, கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாலீபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால், பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தாலீபன்கள் சுட்டனர்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய மலாலா, சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பூரண குணம் அடைந்த மலாலா, தற்போது அங்குள்ள பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வருகிறார்.

நோபல் பரிசு...
இங்கிலாந்தில் இருந்தபடியே தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலாவிற்கு, கடந்த ஆண்டு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து நோபல் பரிசு அளிக்கப் பட்டது.

எரிகல்லுக்குப் பெயர்...
இந்நிலையில், விண்ணில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட ‘316201' என்ற எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக் கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டியுள்ளார்.

பெண்களின் பெயர்...
இது தொடர்பாக அவர் கூறுகையில், "எரிகல்லுக்கு மலாலாவின் பெயரைச்சூட்டி இருப்பது மிகுந்த மரியாதைக்குரியதாகும். ஏற்கனவே எத்தனையோ எரிகல்களுக்கு பெயர் சூட்டி இருந்தாலும், பெண்களின் பெயர்களை சூட்டியதில்லை என்பதை என் சக விஞ்ஞானி டாக்டர் கேரி நியூஜென்ட் நினைவுபடுத்தினார்.

மலாலா பெயர்...
அதைத் தொடர்ந்தே செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே நான் கண்டுபிடித்துள்ள எரி கல்லுக்கு மலாலாவின் பெயரை சூட்டி உள்ளேன். இந்த எரிகல், சூரியனை 5.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications