முதலில் உளவு கப்பல்.. இப்போது சீக்ரெட் கருவிகள்.. மாலத்தீவு கடலில் ஆட்டம் போடும் சீனா! பதற்றம்
மாலத்தீவு: மாலத்தீவு கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு தான் சீன கப்பல்கள் ஒரு மாதம் வரை மாலத்தீவு கடல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தது. இதற்கிடையே இப்போது மாலத்தீவு கடல் பகுதி முழுக்க FAD எனப்படும் சாதனத்தை நிறுவும் பணிகளில் சீன அரசு இறங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக நல்லுறவு இல்லை. மாலத்தீவு அரசின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியாவை ஒரு பக்கம் விமர்சிக்கும் அந்நாட்டு அரசு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே இந்தியப் பெருங்கடல் பகுதியில் FADs எனப்படும் மீன்களை ஒரே இடத்தில் திரட்டும் சாதனங்களை நிறுவுவது குறித்து மாலத்தீவு அரசுடன் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாலத்தீவு
இந்த சாதனங்கள் மீன்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது மட்டுமின்றி, கடலில் ஏற்படும் கெமிக்கல் மற்றும் இயற்பியல் டேட்டாக்களையும் சேகரிக்கும். மீன்பிடி தொழிலையே மாலத்தீவு பெரியளவில் நம்பி இருக்கிறது. ஆனால், கடந்த சில காலமாகவே போதியளவில் மீன்கள் கிடைக்காமல் மாலத்தீவு மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த பிரச்சினையைச் சரி செய்யவே சீனாவிடம் உதவி கேட்டுள்ளனர்.
முன்னதாக இது தொடர்பாகச் சீனாவின் கடல்சார்வியல் நிறுவனத்தின் மூத்த குழுவுடன் மாலத்தீவு மீன்வளத்துறை அமைச்சர் அகமது ஷியாம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மீட்டிங்கில் என்னவெல்லாம் ஆலோசித்தனர் என்பது குறித்து முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஆய்வாளர்கள்
இந்த மீட்டிங்கை தொடர்ந்தே மீன்களை ஈர்க்கும் சாதனங்களைப் பொறுத்தும் பணிகளில் சீன ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். இதற்காக மாலத்தீவு வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து சீன ஆய்வாளர் குழு பணியாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அரசு தரப்பில் இதுவரை இந்தத் திட்டம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மாலத்தீவு கடல் பிரதேசத்தில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகப் புகார் உள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
யாங் ஹாங் 03
முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 03 மாலத்தீவு கடற்பகுதிக்குச் சென்றிருந்தது. ஹாங் 03 சீனா கடற்படையில் மிகவும் மேம்பட்ட ஆய்வுக் கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மாலத்தீவு கடல் பிரதேசத்திலேயே ஒரு மாதம் வரை இருந்த நிலையில், இந்திய அதிகாரிகள் இது தொடர்பாகக் கவலை எழுப்பி இருந்தனர்.
சீன கப்பல் வழக்கமான பராமரிப்பு மற்றும் பணியாளர் சுழற்சிக்காகவே மாலத்தீவில் நிறுத்தப்பட்டதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது. இருப்பினும், ஹாங் 03 கப்பலில் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் திறன் இருந்ததால் இந்திய அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி கடல் ஆராய்ச்சி தொடர்பாக மாலத்தீவு அரசுக்கும் சீனாவின் தென் சீனக் கடல்சார் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது..
இந்திய கவலை
இது சுற்றுச்சுழல் ஆய்வு தொடர்பானது என்றே முதலில் சொல்லப்பட்டது. இருப்பினும், அறிவியல் ஆய்வுகள் என்ற போர்வையில் உளவு சாதனங்கள் நிறுவப்படலாம் என்ற அச்சம் உள்ளது. மாலத்தீவு என்பது இந்தியாவுக்கு மிக அருகே இருப்பதால் மாலத்தீவு கடல் பிரதேசத்தில் சீனாவின் செயல்பாடுகள் என்பது இந்தியாவுக்குக் கவலை எழுப்புவதாகவே உள்ளது
உன்னிப்பாகக் கவனிக்கும் இந்தியா
ஏனென்றால் இந்தியாவின் லட்சத்தீவில் இருந்து வெறும் 70 கடல் மைல் தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது. மேலும், சர்வதேச வர்த்தகத்திலும் இது முக்கிய பாதையாக உள்ளதால் இது ஆய்வை தாண்டி புவிசார் அரசியலை நிர்ணயம் செய்வதிலும் இது முக்கிய பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே சீனாவின் ஆய்வு கப்பல்களின் செயல்பாடு தொடர்பாகச் சீனா தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறது. மேலும், சீன ஆராய்ச்சி கப்பல்களின் நடமாட்டத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
மாலத்தீவு கடல் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மட்டுமே செய்து வருவதாக அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு கூறினாலும், இந்த ஒப்பந்தங்களைச் சுற்றி வெளிப்படைத்தன்மை இல்லாதது பலருக்கும் கவலையை எழுப்புவதாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications