சீனாவுடன் நெருக்கம்.. மாலத்தீவு அதிபருக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்.. நட்பு நாடு இந்தியாதான்!
மாலி: மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் புதிய அதிபரின் வெளியுறவுத்துறை கொள்கையை கண்டித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியாதான், மாலத்தீவின் வரலாற்று ரீதியான நண்பன் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
புவிசார் அரசியலில் மாலத்தீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலத்தீவு உடனான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா அங்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் மாலத்தீவில் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்ஜு வெற்றி பெற்றார். இந்த வெற்றி இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இதன் பின்னணியில் சர்வதேச அரசியல் இருக்கிறது. அதாவது, தற்போது சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. எனவே சீனாவுடன் கைகோர்த்தால் தாங்களும் வளரலாம் என சில நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த வரிசையில் மாலத்தீவும் ஒன்று. தெற்கு ஆசியா பகுதியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஏற்கெனவே இலங்கையை சீனா தன் வசம் கொண்டு வந்துவிட்டது.
இப்படி இருக்கையில் மாலத்தீவு தங்களுடன் நட்புறவை கொண்டாடுவதை சீனா வரவேற்றிருக்கிறது. எனவே அந்நாட்டின் அதிபருடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதன் விளைவாக, மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்கிற உத்தரவை முகமது முய்ஜு பிறப்பித்திருக்கிறார்.
ஏற்கெனவே இலங்கை இந்தியாவின் பேச்சை பெரிய அளவுக்கு கேட்பதில்லை. இப்படி இருக்கையில், மாலத்தீவும் கையைவிட்டு போய்விட்டால் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பலம் குறைந்துவிடும்.
சூழல் இப்படி இருக்கையில், சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட புதிய அதிபருக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி சேர்ந்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றன. அதில், "புதிய அதிபர் மாலத்தீவின் முதன்மை துறைமுகமாக சீனாவை கருதுகிறார். ஆனால் வரலாற்று ரீதியாக புது டெல்லிதான் நம்முடைய முதன்மை துறைமுகமாக இருந்திருக்கிறது. எனவே புதிய அதிபரின் நடவடிக்கை, நமது நாட்டை பாரம்பரியத்திலிருந்து விலகி செல்ல வைத்திருக்கிறது.
தற்போதைய அரசின் நிலைப்பாடு, இந்தியாவுக்கு எதிரானதாக இருக்கிறது. இது நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மாலத்தீவு நாடாளுமன்றத்தின் மொத்தம் உள்ள 87 எம்பிக்களில் 55 எம்பிக்கள் இணைந்து கூட்டாக மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இலங்கைக்கு அடிக்கடி வரும் சீன உளவு கப்பல், அடுத்த வாரம் மாலத்தீவுக்கும் வர இருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் கடற்படை உஷார் படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications