பூட்டிய விமானத்தில் தூங்கிய பயணி... செல்போன் மூலம் காப்பாற்றிய தோழி
லூசியானா: விமானப் பயணி ஒருவர் பயணத்தின் போது அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல், விமானத்தோடு வைத்து பூட்டப் பட்டு விட்டார். பின்னர், தோழிக்கு கிடைத்த தகவல் மூலம் அவர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலிருந்து ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணம் செய்த வாக்னர் என்ற பயணி ஒருவர் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தபடி நன்கு உறங்கி விட்டாராம்.
இதனால், ஹூஸ்டன் விமான நிலையத்தில் அந்நபர் இறங்கவில்லை. விமானத்தில் வாக்னர் உறங்கிக் கொண்டிருப்பதை விமான ஊழியர்களும் கவனிக்கத் தவறி விட்டனர். பயணிகள் இறங்கி விட்டதும், விமானம் அது நிறுத்தப்படவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன.
சிறிதுநேரம் கழித்து வாக்னர் கண் விழித்துப் பார்த்துள்ளார். சுற்றிலும் ஒரே கும்மிருட்டாக இருந்துள்ளது. அப்போது தான், தான் விமானத்திற்குள்ளாகவே இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக தனது செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார்.
அவரது அதிர்ஷ்டம், சிக்னல் இருந்துள்ளது. உடனடியாக தனது தோழியை அழைத்து தான் அடைபட்டுள்ள விஷயத்தைத் தெரியப் படுத்தியுள்ளார். முதலில் வாக்னர் விளையாடுகிறார் என எண்ணிய தோழி, பின்னர் உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக இது குறித்து விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தியுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக வாக்னரை மீட்டு, கவனக் குறைவாக நிகழ்ந்த தவறுக்கு ஈடாக 250 டாலர்கள் தொகையைக் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications