தன்னைத் தானே தலையில் கத்தியால் குத்திக் கொண்ட விமான பயணி.. லண்டனில் பயங்கரம்
லண்டன்: லண்டன் விமானநிலையத்தில் ஆண் பயணி ஒருவர் தன்னைத்தானே தலையில் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன், ஹீத்ரு விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானத்திற்காக பயணிகள் காத்திருந்த சமயத்தில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆண் பயணி ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் தலையில் தானே குத்தியுள்ளார்.
இதைக் கண்டு மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அந்நபரிடமிருந்து கத்தியை பிடுங்கினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விமான நிலையத்திற்குள் வரும்போதே பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்படுவது வழக்கம். எனவே, இந்தப் பயணி விமான நிலையத்திற்கு உள்ளே அமைந்துள்ள கடைகளில் இந்தக் கத்தியை வாக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதோடு, சம்பந்தப்பட்ட பயணி மற்றவர்கள் யாரையும் தாக்க முயற்சிக்கவில்லை. இதனால் இது பயங்கரவாதத் தாக்குதலாகவும் இருக்க முடியாது என்பது அவர்களது கருத்து.
ரயில் நிலையம் ஒன்றில் இம்மாதம் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபர் லண்டனிலிருந்து அபர்தீன் நகருக்குச் செல்வதற்காக வந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் கிழக்கு ஆப்பிரிக்கா அல்லது மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.